ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன் இணைந்து வழங்கும் ஆந்தாலஜி திரைப்படம் “விக்டிம்”

தயாரிப்பாளர் G. டில்லிபாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தமிழ் சினிமாவில் சீரான தனிப்பாதையில் பயணித்து, மதிப்புமிகு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. 2014 ல் ஆரம்பித்த இத்தயாரிப்பு நிறுவனம் வெகு அழகான தரமிக்க படங்களை தந்து வருகிறது. மரகத நாணயம், IMDB தளத்தில் இந்திய படங்களின் வரிசையில் முதல் இடத்தை தக்க வைத்திருக்கும் “ராட்சசன்” மற்றும் 2020 ல் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டரான “ஓ மை கடவுளே” என தொடர்ந்து கருத்திலும், சுவையிலும் கலக்கும் படங்களை இந்நிறுவனம் தந்து வருகிறது. தற்போதைய நிலையில் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் மூன்று படங்களை தயாரித்து வருகிறது. மூன்று படங்களும் தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் இருக்கும் நிலையில், தற்போது ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன் இணைந்து நான்கு கதைகள் கொண்ட “விக்டிம்” எனும் ஆந்தாலஜி படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் நான்கு வெவ்வேறு கதைகளை, இயக்குநர்கள் சிம்பு தேவன் , ராஜேஷ் M, பா. ரஞ்சித் மற்றும் வெங்கட் பிரபு இயக்குகிறார்கள்.

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவன தயாரிப்பாளர் G. டில்லிபாபு இது குறித்து கூறியதாவது:

எங்கள் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்பது உலகளவில் அனைத்து ரசிகர்களும் கொண்டாடும் படங்களை தருவதென்பதே ஆகும். எங்கள் படங்களுக்கு ரசிகர்கள் தரும் பெரும் வரவேற்பும், பேராதரவும் எங்களுக்கு பெரும் பொறுப்புனர்வை தந்திருக்கிறது, தொடர்ந்து அவர்கள் கொண்டாடும் வகையிலான படங்களை தர நாங்கள் பாடுபடுவோம். அந்த வகையில் “விக்டிம்” ஆந்தாலஜி திரைப்படததை ரசிகர்கள் விரும்பும் வகையில் இயக்குநர்கள் சிம்பு தேவன் , ராஜேஷ் M, பா. ரஞ்சித், வெங்கட் பிரபு தருவார்கள் என உறுதியாக நம்புகிறேன். விக்டிம் என்பது ஒரு குற்றசெயல் நடக்கும் போது அதில் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படும் நபரை குறிக்கும் சொல்லாகும். குற்றச்செயலால் ஒருவர் அடையும் உடல் பாதிப்பை விட, மனதளவிலும் ஏற்படும் பாதிப்பென்பது மிகவும் கொடியதாகும். நம்மை நாம் கேள்வி கேட்டுக்கொண்டால் வாழ்வில் நாமும் ஒருமுறை விக்டிமாக இருந்திருப்போம். காரணங்கள் வெவ்வேறானதாக இருக்கலாம், ஆனால் குற்றச்செயலால் நாம் அடையும் அழுத்தம், பயம், பதட்டம் அனைத்தும் எல்லோருக்கும் ஒன்றாகவே ஏற்பட்டிருக்கும். இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் கரு இந்த விக்டிமை மையப்படுத்தியதே ஆகும். தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளாக திகழும் இயக்குநர்கள் சிம்பு தேவன் , ராஜேஷ் M, பா. ரஞ்சித், வெங்கட் பிரபு ஆகியோர் விக்டிம் கருவை அடிப்படையாக வைத்து தங்கள் பார்வையில் நான்கு ‘விக்டிம்’ கதைகளை அழகான வடிவில் தரவுள்ளார்கள்.

இந்த “விக்டிம்” ஆந்தாலஜி திரைப்படத்தில் தமிழின் சிறந்த நடிகர்களான நாசர், தம்பி ராமையா, பிரசன்னா, அமலா பால், நட்டி (எ) நடராஜ் சுப்பிரமணியம், கலையரசன் ஆகியோர் நடிக்கவுள்ளார்கள். இயக்குநர் சிம்பு தேவன் இயக்கும் கதையில் R. சரவணன் ஒளிப்பதிவாளராகவும், சாம் CS இசையமைப்பாளராகவும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள் இயக்குநர் ராஜேஷ் M இயக்கும் கதையில் சக்தி சரவணன் ஒளிப்பதிவாளராகவும், கணேஷ் சேகர் இசையமைப்பாளராகவும், ஆகாஷ் தாமஸ் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்  இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் கதையில் தமிழ் A அழகன் ஒளிப்பதிவாளராகவும், தென்மா இசையமைப்பாளராகவும், செல்வா RJ படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் கதையில் சக்தி சரவணன் ஒளிப்பதிவாளராகவும், பிரேம் ஜி இசையமைப்பாளராகவும், வெங்கட் ராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்