உலகிலேயே மிக நீளமான அடல் சுரங்கப்பாதை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மணாலி – லே இடையே அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரமதர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் கடந்த 2002-ம் ஆண்டு இந்த சுரங்கப்பாதை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் காங்கிரஸ் ஆட்சியில் பணிகள் மிக மெதுவாக நடந்தன. ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டதால், வாஜ்பாய் பெயரே இந்தச் சுரங்கப்பாதைக்கு வைக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பு விஷயங்களில் சமரசம் செய்யப்பட்டது. ஆனால், எங்களின் அரசு நாட்டைப் பாதுகாப்பதில் கூடுதல் அக்கறையும், முக்கியத்துவம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இமாச்சலப் பிரதேசம் மணாலி முதல் லே இடையே 9.02 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப்பாதை மூலம் மணாலி, லே இடையிலான தொலைவு 46 கி.மீ. குறையும். பயண நேரமும் 4 மணி நேரமாகக் குறையும். ஆஸ்திரிய நாட்டின் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் மீட்டர் உயரத்தில், இருவழிப்பாதையாக இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மணாலியில் உள்ள தெற்கு போர்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேறற்று இந்தச் சுரங்கப்பாதையைத் தேசத்துக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

”மத்தியில் 10 ஆண்டுகளில் ஒரு கட்சி ஆண்டபோது அடல் சுரங்கப்பாதை முதல் லடாக்கில் உள்ள தவுலத் ஓல்டி விமானப்படைத் தளம் வரை, தேஜாஸ் விமானம் தயாரிப்பு என அனைத்தும் தாமதிக்கப்பட்டன, மறக்கப்பட்டன. இந்தத் திட்டங்கள் தாமதப்படுத்தப்பட்டதற்கும், மறக்கப்பட்டதற்கும் என்ன அழுத்தம், என்ன கட்டாயம் பின்புலத்தில் வந்தது?
என்னுடைய அரசு, எல்லையில் கட்டமைப்பை வலுப்படுத்தத் தேவையான அனைத்து வலிமையான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது. இதுபோன்று இதற்குமுன் எப்போதும் நடந்தது இல்லை. எல்லையில் சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் எல்லைப்பகுதியில் அமைக்கப்படுவதற்காகப் போடப்படும் திட்டங்கள் அனைத்தும் காகிதத்திலேயே இருந்தன. நடைமுறைக்கு வருவதில் பல்வேறு தடைகளையும், சிரமங்களையும் சந்தித்தன. அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 2002-ம் ஆண்டு இந்தச் சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டினார். அடுத்த ஆட்சிக்கு வந்தவர்கள் இந்தத் திட்டத்தையே மறந்துவிட்டார்கள். கடந்த 2013-14 ஆம் ஆண்டில் 1,300 மீட்டருக்கு மட்டுமே பணிகள் நடந்தன. அப்படியே சென்றிருந்தால், 2040 ஆம் ஆண்டில்தான் இந்தத் திட்டம் முடிந்திருக்கும். ஆனால், 2014-ம் ஆண்டில் என்னுடைய தலைமையில் ஆட்சிக்கு வந்தபின் இந்தத் திட்டம் வேகமெடுத்தது. ஆண்டுக்கு 300 மீட்டர் என்பதிலிருந்து 1,400 மீட்டர் பணிகள் முடிக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது. 26 ஆண்டுகள் நடக்கவேண்டிய பணிகளை என்னுடைய அரசு வெறும் 6 ஆண்டுகளில் முடித்துள்ளது. இதுமட்டுமல்ல தவுலத் பெக் விமானப்பாதையும் கடந்த 40 ஆண்டுகளாக முடிக்காமல் இருந்தது.

எந்தவிதமான அரசியல் விருப்பமும் இல்லை. நான் சொல்லக்கூடிய 12-க்கும் மேற்பட்ட தி்ட்டங்கள் அனைத்தும் ராஜாங்க ரீதியில் முக்கியமான திட்டங்கள். ஆனால், பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்பு விஷயங்களில் முன் சமரசம் செய்யப்பட்டது. ஆனால், என்னுடைய ஆட்சியில் பாதுகாப்புத் துறைக்கும், நாட்டின் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தேசிய நலனை விடவும், தேசத்தைப் பாதுகாப்பதை விடவும் எங்களுக்கு எதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை. ஆனால், தேசத்தின் நலன் புறக்கணிப்பட்டதையும், சமரசம் செய்யப்பட்ட காலத்தையும் தேசம் பார்த்துள்ளது. பிஹாரில் உள்ள கோசி மேகா பாலமும் வாஜ்பாய் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தத் திட்டம் கடந்த மாதம் என்னால் திறந்துவைக்கப்பட்டது. பாதுகாப்புத் துறையில் பல சீர்திருத்தங்களை அரசு கொண்டுவந்துள்ளது. உள்நாட்டிலேயே தளவாடங்கள் தயாரிக்கவும், தேவையை நிறைவு செய்யவும் முன்னுரிமை அளிக்கப்படும்”. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.