ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த குற்றவாளி கைது. பணம் ரூ.51,470/-, செல்போன் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், உதவி ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக D-3 ஐஸ்அவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல் குழுவினர் 12.102020 அன்று மதியம் திருவல்லிக்கேணி, சுந்தரமூர்த்தி விநாயர் கோவில் தெருவில் கண்காணித்தபோது, அங்கு ஒரு நபர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை துண்டு காகிதத்தில் எழுதிக் கொடுத்து ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், மேற்படி இடத்தில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த விஜயகுமார், வ/57, த/பெ.ஜெயராமன், சுந்தர மூர்த்தி விநாயர் கோயில் தெரு, திருவல்லிக்கேணி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.51,470/-, 1 செல்போன், மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட விஜயகுமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.