சாலை பாதுகாப்பு அனுசரிப்பு

32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிப்பை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக 18.01.2021 முதல் 17.02.2021 வரை சென்னையில் 1333 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. இதன் மூலம் பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் மாணவர்கள் போன்றவர்களுக்கு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சென்னை புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த நிறைவு விழா சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், தலைமையில் நடைப்பெற்றது. இதில் அவர் சிறப்புரையாற்றி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த உதவிய அனைவரின் சீரிய முயற்ச்சிகளை வெகுவாக பாராட்டினார்கள். பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை பரவசப்படுத்தின.

இந்நிகழ்ச்சியில் டாக்டர். பிரசாத் மன்னே எழுதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு புத்தகம், நேரு யுவ கேந்திரா இளைஞர்கள் தயாரித்த காலண்டர், யூசுப் பாஷா குழுவினருடைய குறுந்தகடு வெளியிடப்பட்டது. சகோதரன் அமைப்பை சேர்ந்த திருநங்கயரின் நடனம் மூலமாகவும், நிமிர்வு குழுவினருடைய பறையிசை மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அலர்ட் அமைப்பினரின் முதலுதவி பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. விபத்து ஏற்பட்ட நேரத்தில் கருணையோடு உதவிய கருணையாளருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பொதுமக்கள் சிலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர் டாக்டர். நா.கண்ணன், இ.கா.ப இணை ஆணையாளர்கள் போக்குவரத்து லட்சுமி, டாக்டர். பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.