சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.

சென்னை பெருநகர காவல் நிலையங்களில் பதிவான வழக்குகள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகளை விரைந்து விசாரணை செய்து முடிக்கவும், குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்று தரவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில், 10.10.2020 அன்று காலை காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற அரசு வழக்குரைஞர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் டி.கோபிநாத், துணை இயக்குநர், அரசு தரப்பு குற்றவியல் வழக்கு தொடர்பு துறை, சென்னை, பன்னீர்செல்வம், துணை இயக்குநர், காஞ்சிபுரம், கௌரி அசோகன், சென்னை அரசு வழக்குரைஞர் மற்றும் எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ் டவுன், தாம்பரம், பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகிய குற்றவியல் நீதிமன்றம், அமர்வு நீதிமன்றம், விரைவு நீதிமன்ற அரசு வழக்குரைஞர்கள், கூடுதல் அரசு வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

இக்கலந்தாய்வில், நீதிமன்றத்தில் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள வழக்குகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வழக்குகள் தாமதமாவதற்கான காரணங்கள் ஆராயப்பட்டும், சாட்சிகள் விசாரணை மேம்படுத்துதல், பிடிக்கட்டளைகளை நிறைவேற்றுதல், அரசு சாட்சிகள் நீதிமன்றத்தில் விரைந்து விசாரணை செய்தல், பிணை உத்தரவு ரத்து செய்ய முறையான பதிவு செய்தல் மற்றும் இதர நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்க ஆவண செய்தல், வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உறுதியான தண்டனை பெற்று தருதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வழக்குகளை கையாளும் காவல் விசாரணை அதிகாரிகளுக்கு விரைந்து முடிப்பதற்கான பல அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இக்கலந்தாய்வு கூட்டத்தில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர்.ஏ.அமல்ராஜ், (தலைமையிடம்), முனைவர் ஆர்.தினகரன், (தெற்கு), ஏ.அருண், (வடக்கு), 4 மண்டல இணை ஆணையாளர்கள் மற்றும் போக்குவரத்து இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.