சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கண்ணகிநகரில் பொதுமக்கள் மற்றும் காவல் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், 14.01.2021 அன்று மாலை கண்ணகிநகர் குடியிருப்பு பகுதிக்கு சென்று அப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் கண்ணகிநகர் காவல் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார். J-11 கண்ணநிகர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், காவல் ஆணையாளர் பொதுமக்களின் பொங்கல் பானையில் அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை போட்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

பின்னர் இளைஞர்களின் கயிறு இழுத்தல், உறியடித்தல் மற்றும் பொங்கல் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து கண்டுகளித்தார். பின்னர் சிறுவர், சிறுமியர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து, பாராட்டினார். பின்னர் பொங்கல் போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு கோப்பைகள் வழங்கியும், கலைநிகழ்ச்சிகள் மற்றும் நாடகத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும் வாழ்த்தினார்.

மேலும், பாலியல் தொடர்பான புகார்கள் தெரிவிப்பதற்காக புதிய அஞ்சல் பெட்டிகளின் சேவைகளை துவக்கி வைத்து, சிறுவர், சிறுமிகளுக்கு சுயமுகவரியிட்ட அஞ்சல் அட்டைகளை காவல் ஆணையாளர் வழங்கினார். மேலும், J-11 கண்ணகிநகர் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் திறந்து வைத்தார். இவ்விழாவில் சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல இணை ஆணையாளர் ஏ.ஜி.பாபு,இ.கா.ப., அடையாறு காவல் துணை ஆணையாளர் வி.விக்ரமன், துரைப்பாக்கம் காவல் உதவி ஆணையாளர், J-11 கண்ணகிநகர் காவல் நிலைய ஆய்வாளர், காவல் குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.