ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரியாக வாரிசு அரசியல் இருக்கிறது – பிரதமர் மோடி

ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரியாக வாரிசு அரசியல் இருக்கிறது. புதுவிதமான சர்வாதிகாரத்தை உருவாக்குகிறது. அதை வேரறுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார். 2-வது தேசிய இளைஞர் நாடாளுமன்றத் திருவிழாவில் காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

”தங்கள் பரம்பரையின், குடும்பத்தின் பாரம்பரியத்தை வைத்து வளர்ந்தவர்களுக்கு சட்டத்தின் மீது மதிப்பும், அச்சமும் இருக்காது. அரசியலில் பரம்பரையின் பெயரைக் கூறி வாக்குக் கேட்டு, அதன் மூலம் கிடைக்கும் தேர்தல் வெற்றி என்பது குறைந்து வருகிறது. ஆனால், அரசியலில் வாரிசு அரசியல் எனும் நோய் முழுமையாக நீங்கவில்லை. இதுபோன்ற வாரிசு அரசியல்தான் சமூகத்திலும், அரசியலிலும் ஊழல் நிலவக் காரணமாகின்றன. மக்கள் தற்போது நேர்மைக்கும், திறமையான செயல்பாட்டுக்கும்தான் ஆதரவு அளிக்கிறார்கள். ஊழல் கறை படிந்த பரம்பரையினரை மக்கள் சுமையாக நினைக்கிறார்கள். ஆனால், அரசியலில் வாரிசு அரசியல் எனும் நோய் இன்னும் முழுமையாக துடைத்தெறியப்படவில்லை. அரசியலில் தங்கள் குடும்பத்தினரையும், குடும்ப அரசியலையும் காக்கும் நோக்கில்தான், சிந்தனையில்தான், நடத்தையில்தான், செயலில்தான் சிலர் இன்னும் இருக்கிறார்கள். வாரிசு அரசியல் என்பது, புதுவிதமான சர்வாதிகாரப் போக்கை ஜனநாயகத்தில் வளர்த்தெடுக்கிறது. நாட்டுக்கே சுமையாகி, இயலாமைக்குக் கொண்டு செல்கிறது.

தேசம் முக்கியம் என்ற கருத்துக்கு மாற்றாக நான், என் குடும்பம் என்ற கருத்தை வாரிசு அரசியல் வளர்த்தெடுக்கும். அரசியல் என்றாலே, அரசியலில் ஈடுபட்டிருந்தாலே வன்முறை, ஊழல், கொள்ளை நிரம்பியிருக்கும். அதை மாற்ற முடியாது என்ற சிந்தனை இருந்தது. அரசியலில் சேரும் இளைஞர்கள் வழிதவறியவர்களாகக் காணப்பட்டார்கள். ஆனால், அனைத்தும் மாறிவிட்டன. மக்கள் விழிப்புணர்வு பெற்று, அரசியலில் நேர்மையானவர்களுக்கு ஆதரவளித்து அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறார்கள். இன்றைய அரசியலில் நேர்மையும், திறமையும்தான் அத்தியாவசியத் தேவையாக இருக்கின்றன. ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரி இன்னும் இருக்கிறது. அதுதான் வாரிசு அரசியல். நம் முன் மிகப்பெரிய சவாலாக வாரிசு அரசியல் இருக்கிறது. இதை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். இளைஞர்கள் அதிகமாக அரசியலில் சேராவிட்டால் வாரிசு அரசியல் எனும் விஷம் தொடர்ந்து ஜனநாயகத்தைப் பலமிழக்கச் செய்யும். தேசிய அரசியல் தவிர்த்து பல துறைகளில் புதிய சிந்தனைகள், உத்வேகம், திட்டங்கள், கனவுகள் உள்ளவர்கள் தேவைப்படுகிறார்கள்”. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.