தூய்மைக் காவலர் ஊதிய உயர்வு – முதலமைச்சருக்கு நன்றி கூறினார் இரா.முத்தரசன்

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மைக் காவலர்களுக்கு மாதம் ரூ.2600 வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகுப்பூதியத்தை ரூ.3600 உயர்த்தி வழங்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் கடந்த மார்ச் மாதம் சட்டப் பேரவையில் அறிவித்தார். ஆனால் இதற்கான அரசாணை வெளியிடுவதில் நீண்ட தாமதமானது. இந்த நிலையில் இம்மாதம் முதல் தேதியில் (01.12.2020) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து அரசாணை வெளியிட்டு தூய்மைக் காவலர்களின் ஊதிய உயர்வை நடைமுறைப் படுத்தவேண்டும் என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து கடந்த 05.12.2020 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து தான் ஊதிய உயர்வு என தெரிவித்திருப்பது, பேரவையில் அமைச்சர் அளித்த உறுதி மொழிக்கு மாறானது. எனவே தூய்மைக் காவலர்களின் ஊதிய உயர்வை ஏப்ரல் முதல் வழங்கவும், அவர்களது பணியை நிரந்தரம் செய்யவும் முதலமைச்சர் முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.