நடிகர் சூர்யா மீது எந்த நடவடிக்கையும் வேண்டாமென ஓய்வு பெற்ற நீதிபதிகள் பரிந்துரை

உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம். உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மை, சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. சூர்யாவின் கருத்து மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது. “நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்”. இவ்வாறு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் நடிகர் சூர்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாமென ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற 6 நீதிபதிகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு பரிந்துரைத்துள்ளார்கள். சூர்யா தெரிவித்த கருத்துகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சூர்யாவின் அகரம் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவ மாணவிகள் உயர் கல்வி முடித்து நல்ல வேலை வாய்ப்பை பெற்றுள்ள நிலையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டுமெனவும் சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தேவையில்லையெனவும் தங்களது பரிந்துரை கடிதத்தில் கூறியுள்ளார்கள்.