பாபர் மசூதி இடிப்பு வழக்கு – அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு – இரா.முத்தரசன்

கடந்த 1992 டிசம்பர் 6-ஆம் தேதி இந்து மதத் தலைவர்களாலும், கரசேவகர்களாலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆர்.எஸ் எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பாஜக உள்ளிட்ட மதவெறி அமைப்புகள் ஒருங்கிணைந்து, நாடு முழுவதும் மதவெறியூட்டப்பட்ட ‘கரசேவகர்’களைத் திரட்டி பயிற்சியளித்து பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அந்தக் கொடுங் குற்றச் செயலை நியாயப்படுத்தியே வந்துள்ளன. வருகின்றன.
பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி தொடர்பான ‘நிலம்‘ குறித்த தகராறாக முன் வைக்கப்பட்ட உரிமையியல் வழக்கில் உச்ச நீதிமன்றம், ஆவண சாட்சியங்களையும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் சாரத்தையும் அலட்சியம் செய்து விட்டு, “நம்பிக்கையை“ ஆதாரப்படுத்தி அளித்த இறுதித் தீர்ப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது “கொடுங் குற்றச் செயல்” என உச்சநீதிமன்றம் உறுதிபடக் கூறியிருந்தது.

இந்த நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கத்தியார், அசோக் சிங்கால் உட்பட குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். மதவெறி தூண்டுதலால் இழைக்கப்படும் குற்றங்களுக்கு தண்டனை ஏதும் இல்லை என்றால், குற்றச் செயல்களில் இனி பலரும் எந்த அச்சமுமின்றி ஈடுபடுவார்கள். இது, ‘விபரீத விளைவுகளுக்கு’ பச்சைக் கொடி காட்டுவதாகவே அமைந்துள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட குற்றச் சம்பவங்களை நொடிக்கு, நொடி இடைவிடாமல் மின்னணு ஊடகங்கள் வெளியிட்டு இருக்கின்றன. அச்சு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தொகுக்கப்பட்ட ஆவணங்கள் பதிவாகியுள்ளன. ஆய்வாளர்கள் விரிவாக கள ஆய்வு செய்து, அசைக்க முடியாத ஆதாரங்களோடு குற்றச் செயலையும், குற்றவாளிகளையும் அடையாளங்காட்டியுள்ளனர். இவைகள் எதனையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லாமல் மத்திய புலானாய்வுத்துறை படுதோல்வி அடைந்திருப்பது மகாக் கேவலமாகும். அரசியலமைப்பு அதிகாரம் பெற்றுள்ள மத்திய புலானய்வு அமைப்பு ஆளும் வர்க்கத்தின் முகமையாகவும், அதிகார மையத்தின். ‘எடு பிடிகளாகவும்‘ மாறி வருவதை, சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு மண்டையில் அடித்த உணர்த்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் வழி நடத்தும் பாஜக மத்திய அரசின் பாசிசத் தன்மை வாய்ந்த அணுகுமுறை, அரசியலைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளின் மீதான தாக்குதல் கட்டத்திற்கு வளர்ந்திருப்பதை நீதிமன்றத் தீர்ப்புகள் உணர்த்துகின்றன. பாபர் மசூதி இடிப்பு சமூக விரோதிகளால் நடத்தப்பட்டது எனில் அந்த சமூக விரோதிகள் யார்? அடையாளம் காட்ட வேண்டும். குற்றஞ் சாட்டப்பவர்கள் மசூதியை இடிக்கச் செல்லவில்லை; அங்கிருந்த ‘குழந்தை ராமரை’ பாதுகாக்கப் போனதாக கூறியிருப்பது ‘குரூர வன்மம்‘ நிறைந்தது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு, மதவெறி வன்முறை கும்பல்களின் கலவரங்களை அதிகப்படுத்தும் என பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.