பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையின் உச்சநீதிமன்ற காலக்கெடு என்ன ஆனதென்கிறார் தொல்.திருமாவளவன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்த கால எல்லை முடிவுற்ற நிலையில், இதுதொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை இப்போதாவது எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது தொடர்பாகத் தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்து இருந்தது. ஒரு வார காலத்துக்குள் இதில் முடிவெடுக்க வேண்டும் என்று கால எல்லையும் விதித்திருந்தது. அந்த கால எல்லை நேற்றுடன்(சனவரி29) முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில், நேற்று ஆளுநரை சந்தித்த தமிழக முதலமைச்சர் அவர்களும் 7 பேர் விடுதலை தொடர்பாக நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கடிதத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, தமிழக மக்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில் தமிழக ஆளுநர் இன்றைய நள்ளிரவுக்குள் இதில் நல்லமுடிவு ஒன்றை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தமிழக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் ஆளுநரின் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்சினையில் இனியும் கால அவகாசம் கோராமல், தனக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள தனிப்பெரும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்குத் தமிழக ஆளுநர் இன்று நள்ளிரவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு விடுதலை சிறுத்தைகளின் நிறுவனர் தொல்.திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.