ரூ.1.48 கோடி மதிப்புள்ள 2.82 கிலோ தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது

எமிரேட்ஸ் விமானம் ஒன்றின் மூலம் துபாயில் இருந்து புதன்கிழமை அன்று சென்னை வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து சுங்கத்துறையின் விமான நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மலக்குடலில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களை சோதனையிட்ட போது மலக்குடலில் இருந்து 9 பொட்டலங்களில் பசை வடிவிலான 1.28 கிலோ தங்கமும், அவர்களது கால்சட்டைப் பைகளில் இருந்து 4 தங்கத் துண்டுகளும், 2 தங்க சங்கிலிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் ரூ 75.5 லட்சம் மதிப்புள்ள 1.43 கிலோ தங்கம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. முன்னதாக, செவ்வாய் இரவன்று ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் சென்னை வந்த தமிழகத்தை சேர்ந்த ஏழு பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டனர். அவர்களை சோதனையிட்ட போது மலக்குடலில் இருந்து 9 பொட்டலங்களில் பசை வடிவிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 1.39 கிலோ 24 கேரட் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ 72.51 லட்சமாகும். மொத்தம் ரூ 1.48 கோடி மதிப்புள்ள 2.82 கிலோ தங்கம் சுங்க சட்டம் 1962-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கொண்டு விசாரணை நடந்து வருவதாக செய்தி குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.