விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்வது அமைதிக்கு வழிவகுக்கும் – இரா.முத்தரசன்

மத்திய அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை அச் சட்டங்களை செயப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை மீது தீர்வு காண ஒரு குழு அமைப்பதாகவும், அது நீதிமன்றத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என தெளிவுபடுத்தி, அந்தக் குழுவிற்கான உறுப்பினர்கள் பெயரை தருமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளது. மத்திய அரசு, நீதிமன்றம் அமைக்கும் குழுவை ஆயுதமாக பயன்படுத்தி, விவசாயிகளை வஞ்சிக்கும் ஆபத்து இருப்பதை மறுக்க இயலாது. விவசாயிகள் விரோதச் சட்டங்களை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்ற விவசாயிகள் தரப்பு நிலை கருத்தில் கொண்டு குழு அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.