ஜங்கிள் குரூஸ் விமர்சனம்

கற்பனைக்கு ஏதார்த்தம் இல்லை எல்லையும் இல்லை. அதை நிருபிக்கிற படம்தான் ஜங்கிள் குரூஸ். நடக்கமுடியாத சம்பங்களை நடப்பதுபோல் சித்தரித்துக் காட்டும் கதாசிரியகளையும் இயக்குநர்களையும் ரசிக்கும் மக்கள் இருக்கும்வரை அவர்கள்தான் திரையுலக பிரம்மாக்கள். இப்படத்தின் கதாசிரியர்கள் க்ளன் பிஹாரா, ஜான் ரிக்வ்வா மற்றும் மைக்கேல் க்ரீன் ஆகிய மூவரும் ஆவார்கள். ஒருவரின் கற்பனையே வானத்தின் எல்லையை தாண்டும்போது மூவரின் கற்பனைகள் ஒன்று சேர்ந்தால் கேட்கவா வேண்டும். அதை பார்க்க விரும்பினால் ஜங்கிள் குரூஸ் திரைப்படத்தை
பார்க்கலாம். (மனுஷன் எப்படியெல்லாம் யோசிக்கிறான்.)

அமேசான் காட்டைவிட அதிகளவு பரப்பளவைக் கொண்ட காட்டில் ஒரு அதிசய மரம் இருக்கிறது. அந்த மரத்தில் ஒரு அமாவைசை தினத்தன்று பூக்கும் பூக்களுக்கு எல்லாவிதமான நோய்களையும் குணமாக்கும் தன்மையுடையது. அந்த பூவை பறிக்க சுமார் 400 ஆண்டுகளாக பலபேர் அக்காட்டுக்குள் செல்கிறார்கள். ஆனால் யாரும் திரும்பி வரவில்லை. கடைசியாக கதாநாயகி எமிலி ப்ளண்ட் லில்லி ஹெளடன் செல்கிறார். அக்காட்டின் வரைபடத்தையும் அம்மரத்தின் அம்பு முனை சாவியையும் அருட்காட்சியகத்திலிருந்து களவாடி செல்கிறார். அதே அம்பு முனை சாவிக்காக அந்நாட்டின்
இளவரசனும் கதாநாயகியை தொடர்ந்து செல்கிறார். அக்காட்டுப் பகுதியின் சுற்றுலா உதவியாளராக இருக்கும் கதாநாயகன் டிவைனே ஜான்சன் ப்ராங்க் ஒல்ப்பையுடன் அம்மரமிருக்கும் இடத்துக்கு படகு மூலம் பல இன்னல்களை  கடந்து செல்கிறார்கள். இவர்களுக்குத் தெரியாமல் இளவரசனும் நீர்மூழ்கி கப்பலில் பின் தொடர்கிறான்.எல்லா வியாதிகளையும் குணமாக்கும் அந்த பூ குறிப்பிட்ட நாளிலில் பூக்கிறது. சிறிது நேரத்தில் உதிர்ந்து மறைந்துவிடும். அதற்குள் அந்த பூ யார் கையில் கிடைக்கிறது என்பதை வெள்ளித் திரையில் காணலாம்.

திகிலுக்கு பஞ்சமில்லை. இசையின் ஓசை பார்ப்பவர்களின் இதயத்தை பதம் பார்க்கிறது. கதாநாயகனுக்கு வயது 420  ஆனால் இளைஞனைப்போலவே இருப்பார். 400 வருடங்களுக்கு முன் அதிசய பூவை தேடிச் சென்றவர்களில் கதாநாயகனும் ஒருவர் என்பதை உச்சக் கட்ட காட்சியில் சொல்ல வைக்கிறார் இயக்குநர். ஒவ்வொரு திகிலையும் சந்திக்கும் கதாநாயகி, அதை வென்று காட்டும் போது கதாநாயகன் வெறும் டம்பிதான் என்று எண்ணத் தோன்றும். ஆனால் அந்த திகில் சம்பவத்தை உருவாக்கியது கதாநாயகன்தான் என்று தெரியவைக்கும் போது இயக்குநரின்
தனித்தன்மை தெரிகிறது.  நீர்மூழ்கி கப்பலை வைத்து இளவரசன் (வில்லன்) கதாநாயகனின் படகை தகர்க்க வரும்போது, சாமர்த்தியமாக கதாநாயகன் படகை திசை திருப்பி தப்பிப்பது பரவசமூட்டுகிறது. ஆகாயத்திலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகளும் கடல் போல் காட்சியளிக்கும் நீரோட்டமும் மெய்சிலிர்க்க வைக்கிறது.