ரஷ்யா உக்ரைன் போர்; இந்தியா கடமை தவறி விட்டது – வைகோ குற்றச்சாட்டு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்துகின்ற தாக்குதல் நியாயம் அற்றது. உக்ரேனியர்கள் வீரம் மிக்கவர்கள். எத்தகைய தாக்குதல் என்றாலும் தாக்குப் பிடிப்பார்கள். கடந்த காலங்களில், ரஷ்யா மீது, பிற நாடுகள் படையெடுத்தபோது, முன்களப் போராளிகளாக நின்று, அதைத் தடுத்து நிறுத்தியவர்கள் உக்ரேனியர்கள்தான். கடந்த இருபது நாட்களாகப் போர் தொடர்கின்றது. இதற்கு முன்னர், உலகில் பல இடங்களில் இப்படிப்பட்ட மோதல்கள் நடைபெற்றபோதெல்லாம், இந்தியா நடுநிலைமை நாடுகளுக்குத் தலைமை தாங்கி, அணி சேராக் கொள்கையை நிலை நிறுத்தியது. அதனால், இந்தியாவின் மதிப்பு உலக நாடுகள் இடையே உயர்ந்து ஓங்கி இருந்தது. ஆனால், இம்முறை இந்தியா ஒரு பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றது. உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. மன்றத்தின் பாதுகாப்புச் சபையிலும், பொதுச்சபையிலும், விவாதம் எழுந்தபோது, இந்திய அரசு, தன் கடமையைச் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றேன். இவ்வாறு, வைகோ பேசினார்.