கல்வி பயலாத ஏழைகளிடம்தான் தமிழ் உயிர் வாழ்கிறது – தங்கர் பச்சான்

இந்தித்திணிப்பின் போது இணையத்தளங்களில் மட்டும் தான் தமிழர்கள் தங்களின் தமிழ்ப்பற்றினை பறை சாற்றிக்கொள்வோம். ஆனால் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எவருமே தாங்கள் பேசுவது தமிழ்தானா என புரிந்து பேச மாட்டோம். தொடர்ந்து நான்கு தமிழ் சொற்களை இணைத்து பேசத்தெரியாது. ஒரே டென்ஷன். எங்கே மீட் பண்ணலாம். கொஞ்சம் வையிட் பண்ணு. நான் ட்ரைய் பண்றேன். அது வரைக்கும் என்ன டிஸ்டப் பண்ணாத. என் ஃபமிலி கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு சொல்றேன். நீ கொஞ்சம் கெல்ப் பண்ணினா இம்மிடிட்டா வரேன். ஓகேவா கால் பண்ணு. இவ்வாறு தான் இன்று பெரும்பாலான தமிழர்களின் நாக்கு உச்சரிக்கின்றன. தூய தமிழில் எவராவது பேசினால் வேற்று கோள்களிலிருந்து இறங்கி வந்தவர்களை பார்ப்பது போல் தான் பார்ப்போம்.

மூன்று இலட்சம் அளவில் சொற்களைக்கொண்ட தமிழ்க்களஞ்சியத்தில் இருந்து சாகும் வரை ஐம்பது சொற்களைக்கூட கையாளத்தெறியாத ஒரு இனமாக தமிழ் இனம் மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு வினாடி கூட பிற மொழி சொற்கள் கலக்காமல் பேசவோ, நான்கு வரிகள் அதே போல பிழை இன்றி எழுதவோ முடிவதில்லை. ஆனால் எதற்கெடுத்தாலும் சங்க இலக்கியங்களை பெருமையாக மேற்கோள் காண்பித்து தமிழை ஓசையில்லாமல் அழித்துக்கொண்டு தமிழ்நாடு என பெயரிட்ட மாநிலத்தில் தமிழர்கள் எனும் பெயரில் சிறிதும் குற்ற உணர்வின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்! கல்வி பயிலாத ஏழை மக்களிடத்தில் தான் சிறிதேனும் இம்மொழி உயிர் வாழ்கின்றது. அதுவும் இந்த தலைமுறையுடன் அழிந்து போகும். தமிழ் வாழ்கிறதா! வளர்கிறதா! கொல்லப்படுகிறதா! தமிழர்களாகிய நாம் தான் சிந்திக்க வேண்டும்.*********