நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு உலவிக் கொண்டிருக்கும் சிலர், திராவிட மாடல் ஆட்சிக்குக் கெடுதல் விளைவிக்கப் பார்க்கிறார்கள் – முதல்வர் ஸ்டாலின்

இன்று (07-03-2022) நாகர்கோயிலில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

அதன் விவரம் வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று சற்றேறக்குறைய 22 மாதங்கள் ஆகியிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். எனவே இந்த 22 மாதங்கள் நிறைவு பெற்று, அந்த நிறைவு பெற்றிருக்கும் காலகட்டங்களில் நாம் இந்த சமுதாயத்திற்கு, இந்தத் தமிழகத்திற்கு, மக்களுக்கு ஆற்றியிருக்கும் அரும் பணிகள் எல்லாம் எல்லோரும் போற்றும் வகையில் அமைந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்கவோ – மறைக்கவோ முடியாது.

இந்தச் சூழ்நிலையில், இன்று நம்முடைய குமரி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நம்முடைய இதயம் எல்லாம் நிறைந்திருக்கும் நம்முடைய உயிரோடு – ஊனோடு கலந்திருக்கும் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலையினை இந்த மாவட்டக் கழக அலுவலகத்தில் திறந்து வைக்கும் ஒரு சிறப்பான வாய்ப்பு கட்சியின் தலைவர் என்கிற முறையில் எனக்கு வழங்கப்பட்டு அந்தப் பொறுப்பை நான் நிறைவேற்றியிருக்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை இன்றைக்கு நாம் நாடு முழுவதும் ஆங்காங்கு தொடர்ந்து திறந்து வைத்துக் கொண்டிருக்கிறோம். அவருடைய மறைவிற்கு பிறகு, முதன்முதலில் அவரால் உருவாக்கப்பட்ட சென்னையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தலைவர் கலைஞர் அவர்களின் குருகுலமாக விளங்கிக் கொண்டிருக்கும் ஈரோட்டில் திறந்து வைத்தோம். அதற்குப் பிறகு, கலைஞரை உருவாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் காஞ்சிபுரத்தில் திறந்து வைத்தோம். தொடர்ந்து சேலத்தில்,அதுபோன்ற பல இடங்களில் திறந்து வைத்திருக்கிறோம். இன்றைக்கு இந்த குமரி மாவட்டத்தில் – நாகர்கோயில் நகரத்தில் இருக்கும் நம்முடைய மாவட்டக் கழக அலுவலகத்தில் திறந்து வைத்திருக்கிறோம்.

எனவே இந்தச் சிலையினை திறந்து வைத்திருக்கும் நேரத்தில் நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புவது, எந்த லட்சியத்திற்காக தலைவர் கலைஞர் அவர்கள் – அறிஞர் அண்ணா அவர்கள் பாடுபட்டு இருக்கிறார்களோ, அந்த லட்சியத்தை மனதில் ஏற்றுக்கொண்டு நாம் நம்முடைய கடமையை ஆற்றிட வேண்டும் என்பதற்காகத்தான், ஆட்சியில் இருந்தாலும் – இல்லை என்று சொன்னாலும் நாம் நம்முடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

எனவே இன்றைக்கு நம்மைப் பார்த்து பாராட்ட க்கூடியவர்கள் – வாழ்த்த கூடியவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கும் பல்வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்களும் – மாநிலத்தின் தலைவர்களும் நம்மை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அதையும் கடந்து, கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் – வெளிநாடுகளில் இருக்கும் பல்வேறு அமைப்புகள் – தமிழர்கள் நம்முடைய ஆட்சியின் சாதனைகளைப் பார்த்து, நாம் ஆற்றும் பணிகள் எல்லாம் பார்த்து மனதாரப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அதேநேரத்தில் இன்றைக்கு நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு உலவிக் கொண்டிருக்கும் சிலர், இந்த ஆட்சி இப்படி செயல்பட்டு கொண்டிருக்கிறதே, ‘திராவிட மாடல்‘ என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் ஒரு கவர்ச்சிகரமான – மக்களை கவரும் வகையில் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்களே, எனவே தொடர்ந்து இந்த ஆட்சியை விட்டால் நம்முடைய பிழைப்பு என்னாவது? என்ற நிலையில் நம்மீது புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆட்சிக்கு எப்படியாவது கெடுதல் செய்து,இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை எல்லாம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். எங்காவது கலவரத்தை ஏற்படுத்தலாமா? ஜாதிக் கலவரத்தை தூண்டலாமா? மதக் கலவரத்தை ஏற்படுத்தலாமா? ஆங்காங்கே இருக்கும் மக்களிடத்தில் பிளவுகளை ஏற்படுத்தலாமா?என்றெல்லாம் திட்டமிட்டு அந்தக் காரியத்தில் இன்றைக்கு அவர்கள் எல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள்.

என்னை பொறுத்தவரையில் நம்மீது சொல்லப்படும் தேவையற்ற விமர்சனங்களுக்கு எல்லாம் நான் அதிகம் பதில் சொல்வதில்லை. ஏனென்றால் அதைச் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதன் மூலமாகத் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் அந்தப் பிரச்சாரத்தை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். யார் யாரெல்லாம் அதற்கு பதில் சொல்ல வேண்டுமோ, அவர்களை வைத்து நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

எனவே நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புவது, விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் ,தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு சிறப்பான கூட்டணியை நாம் அமைத்து – மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை அமைத்து, தொடர்ந்து – நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி,உள்ளாட்சி அமைப்பின் தேர்தலாக இருந்தாலும் சரி,அதேபோல் அண்மையில் நடந்த இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி – எல்லா தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை நாம் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே வெற்றியைத் தொடங்கி, ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு அந்த வெற்றியை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம். எனவே இதை அவர்களாக தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஆனால் அதே நேரத்தில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரையில், நான் 1-ஆம் தேதி நந்தனத்தில் நடந்த என்னுடைய பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசுகிறபோது, பல்வேறு மாநிலத்தின் தலைவர்கள் எல்லாம் வைத்துக் கொண்டு நான் சொன்னேன், “நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது – கூட்டணி சிறப்பாக இருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து நாங்கள் வெற்றி பெறுகிறோம். ஆனால் தமிழ்நாட்டை மட்டுமல்ல, நாட்டையும் நாம் காப்பாற்ற வேண்டும் – நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால், நாடு முழுவதும் இருக்கும் மதச்சார்பற்ற தலைவர்கள் இந்த பா.ஜ.க ஆட்சியை ஒழிக்க வேண்டும். நாம் ஒன்று சேர்ந்து ஒற்றுமை உணர்வோடு தேர்தல் களத்தில் ஈடுபட வேண்டும். நமக்குள் இருக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, Prestige Issue எல்லாம் பார்க்காமல், நாம் ஒற்றுமையாக இருந்து ஈடுபட வேண்டும்“ என்று வேண்டுகோளைதான் நான் எடுத்து வைத்தேன். அதைத்தான் நான் தொடர்ந்து எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் செய்தீர்கள் என்றால் நிச்சயமாக இன்றைக்கு நாம் தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையும் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்பதைத் தெளிவாக சொன்னேன்.

எனவேதான் அதே உணர்வோடு தொடர்ந்து என்னுடைய கடமையை நான் ஆற்றப்போகிறேன், ஆற்றிக் கொண்டிருக்கிறேன். ஆற்றப்போகிறேன், ஆற்றிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் உங்களுடைய ஒத்துழைப்போடுதான், நீங்கள் தரும் அந்த ஒத்துழைப்போடுதான் அந்தப் பணியை நிறைவேற்றப் போகிறேன்.

தலைவர் கலைஞர் சிலையைத் திறந்து வைத்தால் மட்டும் போதாது. கலைஞர் எதற்குப் பாடுபட்டாரோ, எதற்கு பணியாற்றினாரோ, எதற்காக உழைத்தாரோ, என்ன லட்சியத்தை நமக்கு கற்றுக் கொடுத்தாரோ, அதை மனதில் ஏற்றுக்கொண்டு நாம் அந்தப் பணியை நிறைவேற்றினால்தான், அந்த சிலையைத் திறந்து வைத்ததற்கு உள்ளபடியே நாம் மரியாதை செலுத்துவதாக அமைந்திட முடியும்.

எனவே அந்த உணர்வோடு நீங்களும் உங்கள் கடமையை ஆற்றுங்கள்… கடமையை ஆற்றுங்கள் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு, கலைஞர் புகழ் வாழ்க… வாழ்க… வாழ்க என்று வாழ்த்தி, இந்த கலைஞர் சிலையை இங்கு அமைத்துத் தருவதற்கு எல்லா வகையிலும் துணை நின்ற

மாவட்டக் கழகத்திற்கும், மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும், ஒத்துழைப்பு வழங்கியிருக்கும் கழக முன்னோடிகளுக்கும், ஒன்றியக் கழக, நகரக்கழக, பேருர்க் கழகதின் செயலாளர்கள், கட்சியின் செயல்வீரர்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் ஒருமுறை என்னுடைய இதயப்பூர்வமான நன்றியைத் தலைமைக் கழகத்தின் சார்பில் தெரிவித்து என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி! வணக்கம்!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.