சாதிய வன்கொடுமைகளும், ஆணவக் கொலைகளும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது – இயக்குநர் லோக பத்மநாபன்

8 ஸ்டுடியோஸ் பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லோக பத்மநாபன் தயாரித்து, இயக்கி கதையின் நாயகனாக நடித்து இசையும் அமைத்திருக்கும் படம் “செம்பியன் மாதேவி”. நாளை (ஆக.30) திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் சிறப்பு காட்சி பத்திரிகையாளர்களுக்கு ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையிடப்பட்டது. சிறப்பு காட்சிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பகிர்ந்துக் கொண்ட இயக்குநரும் தயாரிப்பாளருமான லோக பத்மநாபன், “செம்பியன் மாதேவி முழுக்க முழுக்க உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம். படத்தில் இடம்பெறும் சம்பவங்கள், தமிழகத்தில் மட்டும் அல்ல நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் தற்போதும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சம்பவங்கள் தற்போது நடக்கவில்லை, என்று யாரும் மறுக்க முடியாது.” என்றார்.

படத்தை எத்தனை திரையரங்குகளில் வெளியிடுகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த பத்ம லோகநாதன், “அது தான் இன்று வரை கேள்விக்குறியாக இருக்கிறது. இன்று வரை எங்களுக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. என் சொந்த ஊரில் நான்கு திரையரங்குகள் இருக்கின்றன, ஆனால் ஒன்றில் கூட எனக்கு ஒரு காட்சி கூட இதுவரை தரவில்லை. இவ்வளவு பணம் செலவு செய்து, சமூகத்திற்கான ஒரு படம் எடுத்திருக்கிறேன், ஆனால் எனக்கு இதுவரை திரையரங்குகள் ஒதுக்கப்படாதது கவலையாக இருக்கிறது. நான் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருக்கிறேன், அவர்களிடமும் முறையிட்டு தன இருக்கிறேன். இருந்தாலும் எனக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை, என்பது பெரும் வேதனையாக இருக்கிறது.” என்றார்.

மேலும் சாதி பிரச்சனைக்கு காதல் தீர்வாகுமா? என்ற கேள்விக்கு, “இதில் நான் எந்த தீர்வும் சொல்லவில்லை, சாதி பாகுபாட்டால் காதலர்கள் எப்படி சீரழிக்கப்படுகிறார்கள், என்பதை தான் சொல்லியிருக்கிறேன். அதுமட்டும் அல்ல, இது என் கற்பனை கதை அல்ல, நான் கேள்விப்பட்ட, பார்த்த, நாம் பத்திரிகைகளில் படித்த சம்பவங்கள் தான் என்பதால், இதை யாராலும் மறுக்க முடியாது.” என்றார்.