குடும்ப உறவை சொல்லும் படம் “மெய்யழகன்”

நடிகர் சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்சாமி, ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், இளவரசு, ஶ்ரீதிவ்யா, தேவதர்ஷினி ஆகியோரின் நடிப்பில்  வெளிவந்திருக்கும் படம் “மெய்யழகன்”. தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தில் பெரும் செல்வந்த குடும்பத்தின் உறுப்பினராக இருக்கும் ஜெயப்பிரகாஷ் தனது வீட்டை விற்றுவிட்டு இளம் வயது அரவிந்சாமியுடன் சென்னைக்கு குடியேறுகிறார். 20 வருடங்கள் கழித்து தனது சித்தியின் மகள் திருமணத்திற்காக தஞ்சாவூரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு அரவிந்சாமி வருகிறார். அரவிந்சாமியுன் உறவினர்கள் அனைவரும் மிகுந்த ஆனந்தத்தில் கண்ணீர் மல்க வரவேற்று உபசரிக்கிறார்கள். அரவிந்சாமியும் தான் பார்க்கும் ஒவ்வொருவரின்  உறவு முறைகளையும் அவர்களது பெயர்களையும் தெர்ந்து கொண்டு அவர்களுடன் அன்பு பாராட்டுகிறார். அரவிந்சாமியை “அத்தான் அத்தான்” என்றுகூறிக் கொண்டு கார்த்தி பாச மழையை பொழிகிறார். ஆனால் அரவிந்சாமியால் கார்த்தியை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. கார்த்தியின் பெயரும் அரவிந்சாமிக்கு தெரியவில்லை. கார்த்தி காட்டும் அன்பின் பெருக்கால் கார்த்தியிடம் நீங்கள் யார்? உங்களது பெயர்? என்ன என்று கேட்கவும் முடியவில்லை. மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் சூழ்நிலை அமையாமல் அர்விந்சாமி தவிக்கிறார்? கார்தியை அடையாளம் கண்டு கொண்டாரா? இல்லையா? என்பதுதான் கதை. இந்தப் படத்தில் பறந்து பறந்து அடிக்கும் சண்டையில்லை, காதலியை இறுக்க அனைத்து உதட்டில் முத்தமிடும் ஆபாச காட்சியில்லை. சிரிக்க வேண்டும் என்பதற்காக இரட்டை அர்த்த வசனமில்லை. ஆனாலும் நகைச்சுவை காட்சிகள் படத்தில் நிறைந்து கிடக்கிறது. மசாலா காட்சிகள் எதுவும் இல்லாமல் ஒரு படத்தை வெற்றிப்படமாக உருவாக்க முடியும் என்பதை இயக்குநர் இப்படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார். உறவின் பிரிவை நினைத்து ராஜ்கிரணும் ஜெயப்பிரகாசும் அழுகின்ற காட்சி இயற்கையாகவே உள்ளது. உறவினர்கள் காட்டும் பாசத்தின் அளவை தாங்க முடியாமல் அரவிந்சாமி கண் கலங்குவதில் அவர் நடிக்கவில்லை. உண்மையிலேயே அவர் அழுகிறார் என்பது தெரிகிறது. அப்படியொரு கதை அமைப்பு. கல்லங்கபடமில்லாத கிராமத்தானகவே கார்த்தி மாறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சிரித்த முகத்துடன் கார்த்தியின் கலகலப்பான நடிப்பு அவரது ரசிகர்களுக்கு திருமண விருந்து போல் இருக்கும். மொத்தத்தில் மெய்யழகன் மெய் சிலிர்க்க வைக்கிறது. குடுமபத்துடன் என்று பார்க்க வேண்டிய படம் “மெய்யழகன்”.