பால் வளத்துறை மற்றும் கதர்த் துறைஅமைச்சர் ஆர். எஸ் .ராஜகண்ணப்பன் தலைமையில் அனைத்து மாவட்ட பொது மேலாளர்கள் மற்றும் துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) உடன்ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் பால் வளத்துறை மற்றும் கதர்த்துறைஅமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் அனைத்து மாவட்ட ஆவின் பொது மேலாளர்கள் மற்றும் துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  பால் கொள்முதலை அதிகரிக்க கீழ்கண்ட நடவடிக்கைகளை  அமைச்சர் அறிவுறுத்தினார். 1. சங்கங்கள் இல்லாத கிராமங்களில் புதிய சங்கங்களை உருவாக்குதல், 2. புதிய உறுப்பினர்களை சேர்த்தல் 3. பாலின் தரத்தை உறுதி செய்தல், 4. சங்க உறுப்பினர்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்குதல், 5. தொடக்கப் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் நிதி நிலைமையை வலுவாக்குதல் 6. சங்க உறுப்பினர்களுக்கு 10 நாட்களுக்குள் பால் பணம் பட்டுவாடா நிலுவையின்றி செலுத்துதல், 7. கால்நடைகளுக்கு தங்குதடையின்றி தீவனம் மற்றும் தாது உப்பு கிடைப்பதை உறுதி செய்தல்.

பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் விநியோகம் செய்யவும், எதிர்வரும் பருவ மழையை எதிர்க்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர்  அறிவுறுத்தினார். ஆவின் நிறுவனம் தினமும் சராசரியாக 14.50 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துவரும் நிலையில், கனமழை பெய்த போதிலும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் தேவைக்கேற்ப ஆவின் நிறுவனம் பால் விநியோகத்தை அதிகரித்து 15.10.2024 அன்று 16 இலட்சம் லிட்டர் பால் மற்றும் 16.10.2024 அன்று 16.50 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துள்ளது.                  2 இலட்சம் லிட்டர் பால் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டி  அமைச்சர் அதிகாரிகளைப் பாராட்டினார்.

தீபாவளி பண்டிகை காலங்களில் பொது மக்களுக்கு தேவைக்கேற்ப இனிப்பு  மற்றும் கார வகைகளை தயாரிக்கவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி விற்பனையை 20%  சதவீதம் அதிகப்படுத்த வேண்டும் எனவும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான தீபாவளி இனிப்புகளை வழங்க முன்கூட்டி திட்டமிட அமைச்சர்  அறிவுறுத்தினார்.