தீபாவளி பண்டிகையையொட்டி மதுவிற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு தமிழக அரசு முன்னேற்பாடு பணி மேற்கொள்வது மக்கள் நலனுக்கு எதிரானது – சரத்குமார்

தமிழ்நாட்டில், ஆளும் அரசின் கூட்டணியில் இருக்கும் விசிக, மது ஒழிப்பு மாநாடு நடத்தியதோடு,மத்திய அரசு மது விலக்கை அமல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்து அதிக நாட்கள் கூட ஆகாத நிலையில் டாஸ்மாக் கடைகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்காக, 3500 டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்கள் அமைத்தல், பல இடங்களில் QR Codeபயன்படுத்துதல் போன்ற புதிய வியாபார உத்திகளை அரசு அறிவித்திருப்பது, மதுவிலக்கு குறித்த அரசின் நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது. தீபாவளிப் பண்டிகையையொட்டி விற்பனையை அதிகப்படுத்த இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை தமிழக மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். மதுவிலக்குதான் முதல் கையெழுத்து என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதோடு, படிப்படியாக மதுவை குறைப்போம் என்ற அரசின் உத்திரவாதமும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. மதுவருவாயை மட்டும் நம்பி தமிழகத்தை வழிநடத்துவதாக எழும் குற்றச்சாட்டுகளை அரசு புறந்தள்ளிவந்தாலும் அது உண்மை என தற்போதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இனியும் மத்திய அரசு மீது அனைத்து பழிகளையும் சுமத்தாமல், மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்