கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கோ-ஆப்டெக்ஸ், எழும்பூர், தில்லையாடி வள்ளியம்மை விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையினை துவக்கி வைத்து, புதிய இரகங்களை அறிமுகம் செய்து பார்வையிட்டார்

சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையிலுள்ள கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு விற்பனை விழா, புதிய இரகங்கள் அறிமுகப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் சிறப்புரிமை அட்டை அறிமுக விழா நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு, தீபாவளி 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனையினை துவக்கி வைத்து, புதியதாக வடிவமைக்கப்பட்ட கைத்தறி இரகங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தும், வாடிக்கையாளர்களுக்கான கோ-ஆப்டெக்ஸ் சிறப்புரிமை அட்டையினை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:  

கைத்தறி இரகங்களின் விற்பனையை அதிகரிக்க ஆண்டு தோறும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை 30%சதவிகிதம் அரசு சிறப்பு தள்ளுபடி அனைத்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது.  இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது 11 மண்டலங்களில் உள்ள 150 விற்பனை நிலையங்கள் மூலம் தீபாவளி விற்பனையை மேற்கொண்டு வருகிறது.  

 இந்த தீபாவளி விற்பனைக்காக தேசிய வடிவமைப்பு நிறுவனம் (NID) மற்றும் தேசிய ஆடை அலங்கார தொழில் நுட்ப நிறுவனங்களில் (NIFT) பயின்ற  வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட இளம் தலைமுறை மகளிருக்கான ஆயத்த ஆடைகளான, குர்த்தீஸ், கிராப் டாப், சார்ட்ஸ், ஜாக்கெட், கர்ட்ஸ் முதலிய இரகங்கள் புதிய முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 700 புதிய வடிவமைப்பில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், சேலம் மற்றும் கோயம்புத்தூர் பட்டு சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெய்யப்பட்ட  பருத்தி சேலைகள், கைலிகள், மெத்தை விரிப்புகள், போர்வைகள், ஆடவருக்கான பல்வேறு வகையான ஆயத்த சட்டைகள், வேட்டிகள், துண்டுகள், வீட்டு உபயோக இரகங்கள் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஆகியவை புதிய வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் உற்பத்தி செய்யப்பட்டு இந்த தீபாவளி விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளதுமற்றும் மூங்கில் இழையால் உற்பத்தி செய்யப்பட்ட துண்டு இரகம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் துணிகள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் “கோ-ஆப்டெக்ஸ்” குடும்பத்தின் ஒரு மதிப்பு மிக்க உறுப்பினராகக்கருதி இந்த சிறப்புரிமை அட்டை (Privilege Card) வழங்கப்படுகிறது.  வாடிக்கையாளர்கள் வாங்கும் ரூ.100 நிகர மதிப்பிலான துணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.  ஒரு புள்ளி என்பதின் மதிப்பு ரூ.1 ஆகும்.  இதன் மூலம் ஒவ்வொரு முறை வாடிக்கையாளர்கள் துணிகள் வாங்கும் போது சேரும் புள்ளிகளை அடுத்தமுறை கோ-ஆப்டெக்ஸின் எந்த விற்பனை நிலையத்திற்கும் சென்று துணிகள் வாங்கும் போது இந்த புள்ளிகளுக்கான தொகையை ஈடு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

 மேலும், தீபாவளி பண்டிகை விற்பனைக்கு ரூ.100 கோடி மதிப்பிலான கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் பேராதரவுடன் விற்பனை நடைபெற்று வருகிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மின் வணிக விற்பனையின் மூலம் இதுவரை ரூ.1.10 கோடி விற்பனை செய்துள்ளது.  இது சென்ற ஆண்டு விற்பனையை விட ரூ.0.75 கோடி அதிகமாகும் என  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் தெரிவித்தார்.

 இந்நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை அரசு செயலாளர் வே. அமுதவல்லி, இ.ஆ.ப., கைத்தறித் துறை இயக்குநர் அ.சண்முக சுந்தரம், இ.ஆ.ப., துணிநூல் துறை இயக்குநர் இரா. லலிதா, இ.ஆ.ப., கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.