சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீசாரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை, திருவொற்றியூர், கிராமத் தெருவில் இயங்கி வரும் விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (25.10.2024) மதியம் ஏற்பட்ட வாயு கசிவினால் மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளனர். தகவலறிந்த H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணராஜ், W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மஞ்சு வரலட்சுமி, H-8 திருவொற்றியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் விஜய், வர்ஷா, ஆகியோர் சம்பவயிடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளை விரைவாக மீட்டு, 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தவிர்த்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப.,மேற்படி சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு பள்ளி மாணவ,
மாணவிகளை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிர் சேதத்தினை தவிர்த்த H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணராஜ், W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மஞ்சு வரலட்சுமி, H-8 திருவொற்றியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் விஜய் மற்றும் வர்ஷா ஆகியோரை இன்று (26.10.2024) நேரில் அழைத்து வெகுவாக பாராட்டி, வெகுமதி வழங்கினார்.