காவல் ஆணையாளர் தலைமையில், குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கான 4-ம் நாள் புத்தாக்கப்பயிற்சி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில், கூடுதல் காவல் துறை இயக்குநர் (தலைமையிடம்) சீமா அகர்வால் வழிகாட்டுதலின் பேரில் இளம் சிறார் நீதிச்சட்டம் (பராமரிப்பும் பாதுகாப்பும்)-2015, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 மற்றும் குழந்தைகளுக்காக இதர சட்டங்களில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வடக்கு மண்டல குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் துணை ஆணையாளர் ஜெயலஷ்மி மேற்பார்வையில் 29.09.2020 அன்று 4-ம் நாள் பயிற்சி காவல் ஆணையாளர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தனிகவனம் செலுத்தி, சென்னை பெருநகரில் உள்ள 160 குழந்தைகள் நல காவல் அதிகாரிகள் (CWPO) மூலம் அனைத்து குழந்தைகளும் பயனடைய காவல் ஆணையாளர் அவர்கள் வழிவகை செய்துள்ளார். மேலும் கூடுதல் காவல் துறை இயக்குநர் சீமா அகர்வாலின் சீரிய முயற்சியால் இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் ஒவ்வொரு குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கும் POCSO Act 2012, JJ Act 2015, Prohibition of Child Marriage Act, Prohibition of Child Labour Act ஆகிய சட்டப்புத்தகங்கள், CWPO Badges, Flash Cards மற்றும் Awareness Posters ஆகியவைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு குழந்தைக்கும் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மதிப்புமிக்க கருத்துரைகளை வழங்கிய சமூக பாதுகாப்புத் துறை, சிறுவர் நீதிக்குழுமம், குழந்தைகள் நல கமிட்டி, மாவட்ட குழந்தைகள் நல அலகு, Child Line, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகிய அனைத்து துறையினருக்கும் காவல் துறையின் சார்பாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், நினைவுப் பரிசை வழங்கி சிறப்புரையாற்றி இப்பயிற்சி இனிதே நிறைவு பெற்றது.