தமிழகத்திலுள்ள பட்டியலினத்தாருக்கு மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் ரூ.771 கோடி ஒதுக்கீடு

கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கம், தினக்கூலியினரையும், தொழிலாளர்களையும் மிக மோசமாகப் பாதித்ததால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மத்திய அரசு பொது முடக்கத் தளர்வுகளை அறிவித்துள்ளதால், விவசாயிகள் புத்துயிர் பெற்று தங்கள் திறனைக் காட்டியுள்ளனர். பெருந்தொற்று பொது முடக்கத்தால், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலனுக்காக தற்சார்பு இந்தியா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், நலிவடைந்த பிரிவினர், சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவினரின் மேம்பாட்டுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. பட்டியல் சாதியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் இ-உத்தானின் கீழ், தேசிய அளவில் ஒதுக்கப்பட்ட ரூ. 83,256 கோடியில், இதுவரை, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்காக ரூ. 5363 கோடி உள்பட ரூ. 21,708 கோடி வழங்கப்பட்டுள்ளது. புதிய முறையின்படி, எஸ்சி, எஸ்டிக்களுக்கான நிதி ஒதுக்கும் பொறுப்பு நிதி ஆயோக் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இ-உத்தான் எஸ்சி மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.771 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், பிரதமர் கிசான் சம்மான் நிதி ரூ. 3.36 கோடி, தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூ.9.5 கோடி ஆகியவை அடங்கும்.

தேசிய பட்டியல் சாதி நிதி மற்றும் மேம்பாட்டு கழகம், திட்டத்தின் மதிப்பில் 90 சதவீதம் அளவு வரை காலக் கடன் வழங்குவதுடன், ரூ.5 லட்சம் வரையிலான கடனுக்கு 6 சதவீதமும், ரூ.5 முதல் 10 லட்சம் வரையிலான தொகைக்கு 8 சதவீதமும் வட்டி விதிக்கப்படுகிறது. இந்தக் கடனை 10 ஆண்டு காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். தாட்கோ எனப்படும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம், சிறப்பு மத்திய நிதி உதவியுடன், தமிழகத்தில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சிறப்பு மத்திய உதவியின் கீழ், ஆண்டுக்கு சுமார் ரூ.125 கோடியை தாட்கோ பெற்று வருகிறது. எஸ்சி பெண்களுக்கான நில கொள்முதல் திட்டத்தில், திட்ட மதிப்பில் அதிகபட்சமாக 30% அல்லது ரூ.2.25 லட்சம் , இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது. தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடைகள் தொடங்கவும், லாரிகள், டிராக்டர்கள், மின்சார டிரில்லர்கள், சுற்றுலா கார்கள், மினி லாரிகள், ஆட்டோக்கள் வாங்கவும், மினி பால் பண்ணை, மின்சார சலவையகம் தையல் தொழில் நடத்தவும், இந்தப் பிரிவினருக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. , திட்ட மதிப்பில் அதிகபட்சமாக 30% அல்லது ரூ.2.25 லட்சம் , இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்கள் தங்களுக்குள் உறுப்பினர்களுக்கு கடன் வழங்க ஏதுவாக, சுழல் நிதி உதவியும் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்கள் வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளைத் தொடங்க பொருளாதார உதவியும் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், சுய உதவிக் குழுக்கள், ஒரு தடவை சுழல் நிதி பெறுவதற்கும், பொருளாதார நடவடிக்கைக்கான ஒரே தடவையிலான நிதி பெறுவதற்கும் தகுதி உடையதாகும். சுழல் நிதிக்கான முன் முடிவு மானியமாக, சுய உதவிக் குழுவுக்கு ரூ.10,000 வழங்கப்படும்.

திருச்சியைச் சேர்ந்த திருமதி கீதா, பொது முடக்கத்திலிருந்து அரசு தளர்வுகளை அறிவித்துள்ள போதிலும்,, மீண்டு வருவதற்கு மேலும் சில காலம் ஆகும் என்பதால், நிதி உதவி அவசியமாகும் என்று கூறினார். முழு இயல்பு நிலை திரும்பிய பின்னர்தான், தினக்கூலியினர் தங்கள் வேலைகளின் மூலம், வழக்கமான வருமானத்தைப் பெற முடியும். வழங்கப்படும் கடன்கள், பொது முடக்க தாக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்கு தங்களுக்கு உண்மையிலேயே, மிகவும் பயனுள்ளதாக உள்ளது என, சுய உதவிக் குழு உறுப்பினர்கள் லட்சுமி மற்றும் கலா கூறுகின்றனர். நலிவடைந்த பிரிவினருக்கும், சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அரசு உதவிக்கரம் அளித்து வருகிறது. தேசிய பொது நீரோட்டத்துடன் அனைத்து சமுதாயத்தினரும் மேம்பாடு அடைந்தால் மட்டுமே, நாடு முழுமையான முன்னேற்றத்தை அடையும்.