ஈராஸ் – பிரபு சாலமன் – ராணா – விஷ்ணு விஷால் இணைந்துள்ள ‘காடன்’: உலகமெங்கும் மும்மொழிகளில் பொங்கலுக்கு பிரம்மாண்ட வெளியீடு

‘கும்கி’ திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் ‘காடன்’. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்தக் கதாபாத்திரத்துக்காக முழுக்க உடலமைப்பை மாற்றி சிரத்தை எடுத்து நாயகனாக நடித்துள்ளார் ராணா. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தினமும் 20 யானைகளை வைத்து முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் 40 நாட்கள் நடைபெற்றது. பின்பு உன்னி என்ற யானையை வைத்து கேரளாவில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. பின்பு, புனேவில் உள்ள சதாரா, மும்பை பிலிம் சிட்டி, காரகர் என தொடர்ந்து 70 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். பெரும் காடுகள், மலைகள் என கஷ்டப்பட்டு பல காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அவை அனைத்துமே திரையரங்கில் பார்த்தால் மட்டுமே, அதன் பிரம்மாண்டம் தெரியும். திரையரங்கில் மட்டுமே வெளியாகும்.  இந்தப் படத்துக்காக காடுகளின் இயற்கை ஒலி படத்துக்கு முதுகெலும்பாக இருப்பதால் ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி ‘காடன்’ படத்துக்கு ஒலியை வடிவமைத்துள்ளார். ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராணா 2 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ளார். விஷ்ணு விஷால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யானை பாகனாக நடித்துள்ளார். நாயகியாக ஜோயா நடித்துள்ளார். இந்தப் பிரம்மாண்ட தயாரிப்பை 2021-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்குக் கொண்டுவர ஈராஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
படக்குழுவினர் விவரம்:
தயாரிப்பு – ஈராஸ் நிறுவனம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரபு சாலமன்
ஒளிப்பதிவு – அசோக் குமார்
எடிட்டிங் – புவன்
சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு – ஸ்டன்னர் சாம், ஸ்டண்ட் சிவா
கலை இயக்குநர் – மயூர்
இசை – சாந்தனு மொய்த்ரா (3 இடியட்ஸ் படத்தின் இசையமைப்பாளர்)
பி.ஆர்.ஓ – நிகில் முருகன்