போஸ்ட் மெட்ரிக்குலேசன் ஸ்காலர்ஷிப் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துக – இரா.முத்தரசன்

காலனி ஆட்சி காலத்தில் தீண்டமைக்கு எதிரான போரட்டத்தில் பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கான கல்வி உரிமைப் போராட்டத்தை அண்ணல் அம்பேத்கர் முன்னெடுத்தார். இதன் பலனான பள்ளிப் படிப்புக்கு மேல் படிப்புக்காக நிதியுதவி செய்திட “போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்” என்ற சிறப்புத் திட்டத்தை 1943 ஆம் ஆண்டு காலனி ஆட்சி அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தை நாட்டின் விடுதலைக்குப் பின்னர் அமைந்த அரசுகளும் அமலாக்கி வந்தன. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகப் பிரிவினரும் போராடி ஸ்காலர்ஷிப் திட்டத்தை பெற்று வந்தனர். சமூக நீதி அமலாக்கத்தில் போஸ்ட் மெட்ரிக்குலேசன் ஸ்காலர்ஷிப் திட்டம் முக்கிய பங்காற்றி வந்த நிலையில், மனுதர்மம், மனுஸ்மிருதி, சனாதானக் கொள்கைகளை செயல்படுத்தும் முயற்சியில் பாஜக மத்திய அரசு போஸ்ட் மெட்ரிக்குலேசன் ஸ்காலர்ஷிப் திட்டத்தை கைவிடுவது என முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து உயர்சாதியினரில் பொருளாதார நிலையில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு பெற்று வருபவர்களையும் சேர்த்து, அனைத்து சமூகப் பிரிவினரும் உள்ளடங்கிய புதிய திட்டம் உருவாக்கி வருவதாகவும் தெரியவருகிறது. மத்திய அரசின் புதிய திட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர், பழங்குடியினரின் கல்வி உரிமையை அடியோடு பறிக்கும் சதிச்செயலாகும். மத்திய அரசின் கல்வி உரிமை பறிக்கும் புதிய திட்டத்தை சில, பல மாநில அரசுகள் ஏற்கவில்லை. ஆனால் அஇஅதிமுக அரசு புதிய திட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பது அடித்தட்டு மக்களுக்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகமாகும். மத்திய, மாநில அரசுகள் சமுக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு, போஸ்ட் மெட்ரிக்குலோசன் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு மேலும் கூடுதல் நிதியொதுக்கி செயல்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு இரா.முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.