இந்தியாவில் கைகளால் செய்யப்படும் பொம்மைகளுக்கு கட்டுப்பாட்டு விலக்களித்துள்ளது

பிரதமரின் தொலைநோக்கு பார்வையான பொம்மைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியாவை தயாரிப்பு முனையமாக மாற்றும் முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்க விரிவான செயல்திட்டத்தை வகுத்துள்ளது. இதன்படி பொம்மைகள் தரக்கட்டுப்பாட்டு ஆணை, 2021, ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவிருக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளின் தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்தோடு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறு குறு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரால் தயாரிக்கப்படும் பொம்மைகளின் உற்பத்தியைக் கருத்தில்கொண்டு, பொம்மைகள் (தரக்கட்டுப்பாடு) இரண்டாவது திருத்தப்பட்ட ஆணை 2020-ஐ தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்கள் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் பொருட்கள், இந்திய தர நிர்ணய அமைப்பின் தரக் குறியீட்டை உபயோகப் படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்திய பொம்மை தரக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதிலிருந்தும், தரக்குறியீட்டை பயன்படுத்துவதிலிருந்தும் புவிசார் குறியீடுகள் கொண்ட பொருட்களுக்கு திருத்தப்பட்ட ஆணை விலக்கு அளிக்கிறது.