இந்தியாவின் 72வது குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராகப் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்கிறார்

இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சிவிவகாரங்கள் துறை அமைச்சர் டொமினிக் ராப், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் சமீபத்தில் தொலைபேசியில் பேசியதை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, கொவிட் பாதிப்புக்கு பிந்தைய உலகில், இந்தியா இங்கிலாந்து இடையேயான கூட்டுறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இருதரப்பு உறவின் முழு திறன்களின் பயன்களைப் பெற, வர்த்தகம், முதலீடு, ராணுவம், பாதுகாப்பு, மக்கள் இடம் பெயர்வு, கல்வி, எரிசக்தி, பருவநிலை மாற்றம், ஆரோக்கியம் ஆகியவற்றை உள்ளடக்கிய, முழு அளவிலான திட்டத்தை வகுக்க அவர் அழைப்பு விடுத்தார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் வாழ்த்தைத் தெரிவித்த, வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப், இங்கிலாந்து சமீபத்தில் நடத்திய பருவநிலை இலட்சிய மாநாட்டில் பங்கேற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். பகிரப்பட்ட மதிப்புகள், நலன்கள் மற்றும் பொதுவான உலகளாவிய சவால்களை ஒன்றாக எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவுடனான உறவை அதிகரிக்க இங்கிலாந்து அரசு முன்னுரிமை அளிப்பதாக அவர் கூறினார். 2021ம் ஆண்டு இங்கிலாந்து தலைமையில் நடக்கும் ஜி7 கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க அழைப்பு விடுத்து, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுப்பிய கடிதத்தை பிரதமரிடம் டொமினிக் ராப் வழங்கினார். இதை ஏற்றுக்கொண்ட பிரதமர், அவருக்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவின் 72வது குடியரசு தின விழாவில், தலைமை விருந்தினராகப் பங்கேற்கும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை அடுத்த மாதம் வரவேற்பதில் ஆர்வமுடன் உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.