அருவருக்கத்தக்க காணொளிகளை வெளியிடும் யூ-ட்யூப் சேனல்களுக்கு காவல்த்துறை ஆணையர் கடும் எச்சரிக்கை

அருவருக்கத்தக்க காணொளிகளை வெளியிடும் யூ-ட்யூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். யூ-ட்யூப் சேனல்கள் சில பொது இடங்களில் பெண்கள், இளைஞர்களிடம் கருத்துக் கேட்பு என்ற பெயரில் கேள்விகளைக் கேட்டு அதற்கு ஆபாசமான பதில்களைப் பெற முயற்சிப் பதையே முழுநேர வேலையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதுபோன்று செயல்பட்டு வந்த ‘சென்னை டாக்ஸ்’ என்ற யூடியூப் சேனலின் மீது சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலை யில், அந்த யூ-ட்யூப் சேனலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இதேபோன்று ஆபாசக் காணொளிகளைத் தங்கள் யூ-ட்யூப் சேனலில் பதிவிட்டு வந்தவர்கள் தங்கள் காணொளைகளை பிரைவேட் பக்கத்திற்கு மாற்றி வருகின் றனர். இந்நிலையில், ஆபாச யூ-ட்யூப் சேனல் மீதான நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், “யூ-ட்யூப் பக்கங்களில் ஆபாசக் காணொளிகள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது. ஆபாசக் காணொளிகளை இதுவரை பதிவிட்டவர்கள் தாமாக முன்வந்து அவற்றை நீக்கிவிட வேண்டும். சைபர் பிரிவு போலிஸார் யூ-ட்யூப் பக்கங்களைக் கண்காணிக்கத் தொடங்கி விட்டார்கள். இனி ஆபாசக் காணொளிகளை பதிவிட்டாலோ அல்லது ஏற்கெனவே பதிவிட்டு அதை நீக்காமல் வைத்திருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.