செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில்  உலக தாய்ப்பால் வார விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2023 ஆம் ஆண்டு உலகத் தாய்ப்பால் வாரத்தின்  கருத்தாக “தாய்ப்பால் ஊட்டலை சாத்தியமாக்குவோம் பணிபுரியும் பெற்றோரின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம்” என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாய்ப்பால் ஊட்டுதலின் சதவீதத்தை மேம்படுத்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தும்படி தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்றைய தினம் (01.08.2024) செங்கல்பட்டு மாவட்டத்தில் தாய்மார்கள் மற்றும் மக்களிடையே தாய்ப்பால் ஊட்டுதலின் முக்கியத்துவம், தாய்ப்பால் வழங்குதல் மூலம் தாய் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.

மேலும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்து மாவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம், தாய்ப்பால் விழிப்புணர்வு சார்ந்த துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். முன்னதாக தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை அனைத்துத் துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.சற்குணா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.