மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

*மக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.கொரோனா மூன்றாம் அலை குறித்த அச்சம் உலக நாடுகளிடையே நிலவிவரும் நிலையில், மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், “மக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும் முறையான பொது சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்காததாலும் டெல்டா வகை கொரோனா பரவிவருகிறது. துரதிருஷ்டவசமாக, நாம் மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம். வைரஸ் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதனால், பல வகை கொரோனா பரவுகிறது. டெல்டா வகை கொரோனா 111 நாடுகளில் தற்போது உள்ளது. இப்போது இல்லையென்றாலும், அதிகம் பரவுக்கூடிய கொரோனாவாக அது மாறும் என எதிர்பார்க்கிறோம்.
சமீப காலமாக, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கா கண்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் விளைவு கொரோனா பரவலும் இறப்பு எண்ணிக்கையும் குறைந்தது” என்றார். நான்காவது வாரமாக உலகளவில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 10 வாரங்களாக இறப்பு எண்ணிக்கை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.