நரை எழுதும் சுயசரிதம்’ சோனி லிவ்வில் வெளியீடு

சமீபத்தில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த நடிகரும், திரை எழுத்தாளருமான மணிகண்டன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ‘நரை எழுதும் சுயசரிதம்’ சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஜி&கே வாஹினி புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஷஷாங்க் வெண்ணெலகண்டி இப்படத்தை தயாரித்துள்ளார். பல்வேறு சர்வதேச திரைப்பட திருவிழாக்களில் விருதுகளை அள்ளிய ‘நரை எழுதும் சுயசரிதம்’ திரையுலகினர் உள்ளிட்ட தரப்பினரின் பாராட்டுகளை ஏற்கனவே பெற்றுள்ளது. தற்போது ரசிகர்களின் பார்வைக்காக சோனி லிவ்வில் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி கணேஷ், மணிகண்டன், மிர்ச்சி விஜய், ஆதவன், ஆர்ஜே சிவச்சங்கரி, ராகெண்டு மவுலி, பிரவீன் ராஜா மற்றும் ஷோபனா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், வாழ்வின் அழகிய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கணங்களின் கோர்வையாக அமைந்துள்ளது. பணியில் இருந்து ஓய்வை நோக்கித் தள்ளப்படும் ஒருவரின் வாழ்வில் வேலையில்லாத இளைஞர் ஒருவரை சந்தித்தவுடன் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. பின்னர் என்ன நடக்கிறது என்பதே ‘நரை எழுதும் சுயசரிதம்’. சமீபத்தில் வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தின் விஷால் வெங்கட் இப்படத்தின் இயக்குநர் குழுவில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் ஷஷாங்க் வெண்ணெலகண்டி தெலுங்கு திரையுலகில் பிரபல எழுத்தாளர் ஆவார். ‘நரை எழுதும் சுயசரிதம்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஆர் வசந்த குமார் கையாள, ரதன் மற்றும் பவன் இசையமைத்துள்ளனர். ராஜேஷ் ராமகிருஷ்ணன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஜி&கே வாஹினி புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஷஷாங்க் வெண்ணெலகண்டி தயாரித்து, நடிகர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நரை எழுதும் சுயசரிதம்’ சோனி லிவ்வில் வெளியிடப்பட்டுள்ளது.