ரூ.98 கோடி செலவில் சென்னை காசிமேட்டில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம்

ரூ.98 கோடி செலவில் சென்னை காசிமேட்டில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படவுள்ளதாக  மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார்.

 மீனவர்களின் தேவைக்கேற்ப பைபர் படகுகள் நிறுத்தும் வசதியோடு கூடிய மீன்பிடி துறைமுகத்தை  மேம்படுத்துவது தொடர்பாக, சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம்  பேசினார்.

சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட ஐந்து மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்துவது குறித்த மிகப்பெரிய அறிவிப்பை கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.  இதன்படி, ரூ.98 கோடி செலவில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பல்வேறு வசதிகளுடன் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படவுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். குளிர்சாதன வசதியுடன் கூடிய பதப்படுத்தும் அரங்கம், ஐஸ் குடோன் உள்ளிட்டவை இங்கு ஏற்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.  பல்வேறு வசதிகளை கொண்ட நவீன மீன்பிடி துறைமுகமாக இது உருவாக உள்ளது என்று கூறிய அமைச்சர், இத்தகைய மீன்பிடித்துறைமுகத்தை ஏற்படுத்த உதவிய பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.   மீன்பிடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழில்முனைவோருக்கு 60 சதவீத மானியத்துடன் கூடிய வாய்ப்புகளை ஏற்பாடு செய்து தரவிருப்பதாக கூறிய அமைச்சர், இன்னும்   இரண்டு மாதத்தில் காசிமேடு துறைமுகத்திற்கான டெண்டர் விடப்படும் என்று தெரிவித்தார்.

2015-ம் ஆண்டில் இருந்து மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7,500 கோடி முதலீடாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ. 1000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மீன்வளத்துறையில் இன்னும் பல மாற்றங்களை கொண்டு வருவதுதான் அரசின் நோக்கம் என்று குறிப்பிட்ட எல்.முருகன், மீனவர்களின் பாதுகாப்பு தான் நமது பாதுகாப்பு என்றும் அதற்காக மத்திய அரசு தனி கவனம் செலுத்தும் என்றும் குறிப்பிட்டார்.  

மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் கடல்பாசி பூங்கா ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறிய அவர், கடல்பாசி தொழில் வளர்ந்து வரும் தொழிலாக உள்ளது என்றார். குறிப்பாக பெண்களுக்கு இந்த பூங்காவில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் இதற்கான இடத்தேர்வு இன்னும் 10 முதல் 15 நாட்களில் செய்யப்படும் என்றும் டாக்டர் முருகன் கூறினார்.