மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல் கடவுளை குறித்த ஞானமும் முக்கியம் – லியோ பால் கொலம்பஸ்

பட்வெர்த்,மே.20- ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவால் நிறுவப்பட்ட மனுஜோதி ஆஸ்ரமத்தின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவ்வாசிரமத்தின் நிர்வாகி மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவராற்றிய சொற்பொழிவில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் அநேக நாடுகளுக்கு சென்று ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற உயரிய கோட்பாடை தெரியப்படுத்தினார். அநேக வேதங்கள் புராணங்களில் இருந்து ஆராய்ந்து அநேக நூல்களை வெளியிட்டுள்ளார். அதன் பிறகு என்னுடைய தந்தை தேவாசீர் லங்காடிவ் அவர்களும் இந்த காரியத்தை கொண்டு சென்றார்.

இப்பொழுது அவருடைய பாதையில் நாங்கள் உலகமெங்கும் இதை கொண்டு செல்கிறோம். இன்றைக்கு மக்கள் இயந்திர வாழ்க்கையில் கடவுளை குறித்தும், கடவுளை குறித்து தியானிப்பதையும் மறந்து விடுகிறார்கள் நாம் எல்லோரும் எவ்விதமாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்கிறோமோ அதே போல் கடவுள் பக்தியையும் நாம் கற்றுக் கொடுக்க கடமை பட்டு இருக்கிறோம். புராணங்களின்படி பக்த பிரகலாதனின் கதையைப் பார்த்தோம் என்றால் அவன் சிறு குழந்தையாக இருக்கும்பொழுதே நாராயணனை பற்றிய ஒரு ஞானத்தை பெற்ற ஒருவனாக மாறுவதை நாம் காண முடிகிறது. அதே விதமாக நம்முடைய குழந்தைகளுக்கு கடவுளைப் பற்றி சொல்லிக் கொடுத்தோம் என்றால் அவர்கள் நல்வழிப்படுத்தப்படுகிறார்கள்.

கடவுளை குறித்த காரியத்தை நாம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்கள் தானாகவே நல்வழிக்குள்ளாக வந்து விடுகிறார்கள். ஆன்மீகத்திற்கு ஓர் வயதை நாம் நிர்ணயத்து விடுகிறோம். எப்படி என்றால் வயசான பிறகு நாம் ஆன்மீகத்தில் சென்று கொள்ளலாம் என்று மக்கள் நினைப்பதை நாம் காண முடிகிறது.

வருங்கால சமுதாயத்திற்கு இறைவனை குறித்து காரியத்தை கொண்டு செல்ல இந்த மனுஜோதி ஆசிரமானது இலவசமாக ஆன்மீக நூல்களை விநியோகிக்கிறது என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். மலேசியாவில் இருக்கக்கூடிய எல்லா தெலுங்கு மக்களுக்கும் என்னுடைய வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மேடையில் தெலுங்கு சரளமாக பேச வராது. உடனடியாக என்னை தமிழன் என்று நினைத்துக் கொள்கிறார்கள் உண்மையிலேயே பார்த்தால் என்னுடைய தகப்பனார் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்னுடைய தாயார் ஆந்திராவை சேர்ந்தவர். அதனால் இரண்டு பாஷையின் மேலும் எனக்கு கௌரவம் இருக்கிறது ஆகவே இந்த மொழியின் மூலமாக நான் பிரிந்திருக்கவில்லை. நாம் எல்லோரும் ஒன்று பட்டு இருந்தோம் என்றால் யாரும் நம்மை எதுவும்  செய்ய முடியாது. அந்தக் கடவுளைத் தவிர வேறு எவரும் நம்மை அரசாள முடியாது. நீங்கள் எந்த வேதத்தை படிப்பவர்களாக இருக்கலாம் எந்த மொழியை சேர்ந்தவர் ஆகவும் இருக்கலாம், எந்த நாட்டை சேர்ந்தவராகவும் இருக்கலாம் நீங்கள் அங்கே வந்து பகவானை தொழுது கொள்வதற்காக மனுஜோதி ஆசிரமம் எப்பொழுதும் 24 மணி நேரம் வருடம் முழுவதும் திறந்து இருக்கிறது. மலேசியாவில் உள்ள

தெலுங்கு மக்களுக்கு இந்னூலை மனுஜோதி ஆசிரமம் கொண்டு சேர்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறது. இவ்விழாவில் கலந்து கொண்ட பிராய் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ.சுந்தராஜு சோமு அவர்களுக்கு மனுஜோதி ஆசிரமத்தின் சார்பாகவும் என்னுடைய தந்தை தேவாசீர் குடும்பத்தின் சார்பாகவும் நன்றி தெறிவித்துக்கொள்கிறேன்’ என்று உரையாற்றினார்.