இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அரிசி, ஆவின் பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு கப்பலில் அனுப்பிடும் நிகழ்வு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.5.2022) சென்னை துறைமுகத்தில், இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வின் முதற்கட்டமாக 9000 மெட்ரின் டன் அரிசி,  200 மெட்ரிக் டன்வின் பால்பவுடர் மற்றும்  24 மெட்ரிக் டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு சரக்குக் கப்பலில் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.  இன்று அனுப்பப்பட்ட முதற்கட்ட உதவிப் பொருட்களின் மதிப்பு 45 கோடி ரூபாய் ஆகும்.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்!” என்றார் இராமலிங்க அடிகளார். அதேபோல “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்ற கணியன் பூங்குன்றனாரின் பொன்மொழிக்கும் ஏற்ப நீராலும் நிலத்தாலும் பிரிந்திருந்தாலும் துன்புறும் உயிர்கள் அனைத்தும் நம் உறவினர்களே  என்ற தாயுள்ளத்தோடு, இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில்  சிக்கித் தவித்து இன்னலுறும்  இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, அப்பொருட்களை வழங்க உரிய அனுமதி வழங்குமாறு31.03.2022 அன்று டெல்லி சென்று மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்தித்த போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார். மேலும், ஒன்றிய அரசின்  வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுதெடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டதுன் 15.04.2022 அன்று கடிதமும் எழுதி நினைவூட்டினார்.

இலங்கை நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமடைந்த நிலையில்  தமிழ்நாடு அரசின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவி புரிந்திட,  40 ஆயிரம் டன் அரிசி, உயிர் காக்கக்கூடிய மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் ஆகிய  அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளை செய்து உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசினை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 29.04.2022 அன்று  தனித்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சரின் தனித் தீர்மானத்தில் அறிவிக்கப்பட்டப்படி, இலங்கை மக்களுக்கு உதவக்கூடிய வகையில் உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்கும் பணியினை சீரிய முறையில் செய்திட அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு அரசு மருந்துப்பொருட்கள் நிறுவனம் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய  உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது. இதனிடையே, தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக 13.05.2022 அன்று இதற்கான ஒன்றிய அரசின் இசைவு பெறப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக, இலங்கை வாழ் மக்களுக்கு முதற்கட்டமாக அத்தியாவசியப் பொருட்களான அரிசி, ஆவின் பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை TAN BINH 99 என்ற சரக்குக் கப்பலில் அனுப்பி வைக்கும் நிகழ்வினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று சென்னை துறைமுகத்தில், கொடிசைத்து தொடங்கி வைத்தார்.  இதில் சிறப்பு நிகழ்வாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் மாதிரித் தொகுப்பினை இலங்கை துணைத் தூதர் முனைவர் வெங்கடேசுவரனிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.   இந்நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மருத்துவம் மற்றும்  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,   பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான், பொதுத்துறை செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் இ.ஆ.ப., தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன், இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ். பிரபாகர், இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத் தலைவர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப., சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் துணைத் தலைவர் எஸ். பாலாஜி அருண்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.