முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (27.08.2024) சென்னை விமான நிலையத்தில் அரசு முறைப் பயணமாக அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப்  பயணம் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டி.

ஊடகத்துறை நண்பர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் முதலில் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசுப் பயணமாக நான் அமெரிக்கா செல்கிறேன். தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு, வருகிற செப்டம்பர் 14 அன்று திரும்பி வருகிற மாதிரி என்னுடைய பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. முதலீடுகளை ஈர்க்க இது போன்ற பயணங்களை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் என்பதும் உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஏற்கனவே, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு நான் பயணங்கள் மேற்கொண்டதன் மூலமாகத் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகள் வந்திருக்கிறது. இந்தப் பயணங்கள் மூலமாக 18 ஆயிரத்து 521  நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 10 ஆயிரத்து 882 கோடி ரூபாய் மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது.

அதில், 990 கோடி ரூபாய் முதலீட்டுக்கான 5 திட்டங்கள் தற்போது உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 21 அன்று நடந்த தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் இந்த 5 திட்டங்களில், சிங்கப்பூரை சேர்ந்த ஹை-பி நிறுவனத் திட்டத்தையும், ஜப்பானின் ஓம்ரான் நிறுவனத் திட்டத்தையும் நான் தொடங்கி வைத்தேன். இந்த இரண்டு நிறுவனங்களின் திட்டங்களால் மட்டும் 1,538 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. 3 ஆயிரத்து 769 கோடி ரூபாய் மதிப்பிலான
3 திட்டங்களின் கட்டுமானப் பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் இருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 21 அன்று நடந்த தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில், ஜப்பானின் மிட்சுபா மற்றும் சட்ராக் நிறுவனங்களின் திட்டங்கள் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி இருக்கிறேன். 3 ஆயிரத்து 540 கோடி ரூபாய் மதிப்பிலான 3 திட்டங்கள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் இருக்கிறது. 483 கோடி ரூபாய் மதிப்பிலான 2 விரிவாக்கத் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் நிலையை அடைந்திருக்கிறது.
2 ஆயிரத்தி 100 கோடி ரூபாய் மதிப்பிலான 4 திட்டங்களை பொருத்தவரைக்கும் அந்தந்த நிறுவனங்களின் தொழில் முதலீட்டுச் சூழல் காரணமாக சிறிய தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

நாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் துரிதமான நிலையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டத்தான் இதை எல்லாம் நான் விரிவாக இங்கே குறிப்பிட்டேன். அதனால்தான், இதுபோன்ற பயணங்கள் மிக மிக முக்கியமானவை!

நமது திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இந்த மூன்றாண்டு காலத்தில் இதுவரை 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 9 இலட்சத்து 99 ஆயிரத்து 93 கோடி ரூபாய். இதன் மூலமாக, 18 இலட்சத்து 89 ஆயிரத்து 234 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் 234 திட்டங்கள் உற்பத்தியை தொடங்கி விட்டார்கள். 4 இலட்சத்து 16 ஆயிரத்து 717 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிட்டது. மற்ற ஒப்பந்தங்களும் படிப்படியாக அடுத்து செயல்பாட்டுக்கு வரும்.

முதலீடுகளை ஈர்ப்பதற்கான என்னுடைய கடந்த வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டு செயல்பாட்டிலும் இருக்கிறது. இதையெல்லாம் நீங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள். அதேபோல், தற்போதைய பயணம் மூலம் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களையும் நான் தொடர்ந்து கண்காணித்து அதை எல்லாம் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவேன்.

இந்த முதலீடுகள் எல்லாம் தமிழ்நாட்டை 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் நம்முடைய இலக்கை விரைவாக அடைய உதவும். இதற்காக உலகின் கவனத்தை தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்க அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ – சிகாகோ மாநகரங்களுக்கு நான் செல்கிறேன். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் விவரங்களைத் திரும்பி வரும்போது உங்களுக்கு நான் நிச்சயம் தெரிவிப்பேன்.

அமெரிக்க வாழ் தமிழர்களைச் சந்திக்க இருக்கிறேன். உங்கள் எல்லோருடைய வாழ்த்துகளோடும் இந்தப் பயணம் நிச்சயமாக வெற்றிகரமானதாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கேள்வி – மத்திய அரசு “சமக்ரா சிக்ஷா” திட்டத்தின் மூலமாக தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டிய 573 கோடி ரூபாய் இன்றைக்கு ஒதுக்கவில்லை. புதிய கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்ளாததால் இந்த நிலை என்று சொல்லியிருக்கிறார்கள். இதை மாநில அரசு எப்படி இந்த விஷயத்தை எதிர்கொள்ளயிருக்கிறீர்கள்?

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பதில் – தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீங்கள் கேட்டதுபோல 573 கோடி ரூபாயை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இந்தச் செய்தி வெளியாகியிருக்கிறது. பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாட்டிற்கான நிதியை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்கவேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் நாடாளுமன்றத்திலும் பேசியிருக்கிறார்கள்; சம்பந்தப்பட்ட அமைச்சர்களைச் சந்தித்து நேரடியாகவும் சொல்லியிருக்கிறார்கள். நானும் இன்றைக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். தொடர்ந்து வலியுறுத்துவோம்.

 

கேள்வி – அமெரிக்கா சென்று வந்தபிறகு அமைச்சரவையில் ஏதாவது மாற்றம் இருக்குமா?

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பதில் – மாறுதல் ஒன்றுதான் மாறாதது. Wait and see.

 

கேள்வி – அமைச்சர் துரைமுருகன்,  ரஜினிகாந்த் விவகாரம் குறித்து நீங்கள் என்ன சார் சொல்கிறீர்கள்?

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பதில் – அவர்கள் இரண்டு பேரும் நீண்டகால நண்பர்கள். அவரும் சொல்லிவிட்டார். இவரும் சொல்லிவிட்டார். அதை நீங்கள் அவர் சொன்னதுபோல, நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, நீங்கள் பகைச்சுவையாக எடுத்தக் கொள்ளக்கூடாது. அதைத்தான் அவர் சொன்னதுபோல நான் திருப்பிச் சொல்கிறேன்.

கேள்வி – இந்த அமெரிக்கப் பயணத்தில் குறிப்பிட்ட இலக்கை முதலீடுகளாக நிர்ணயித்து இந்தப் பயணம் மேற்கொள்கிறீர்களா? 43 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் சிகாகோ மாநாட்டில் தமிழர்களைச் சந்தித்துப் பேசினார். 43 ஆண்டுகளுக்கு பிறகு நீங்களும் தமிழர்களை சந்தித்துப் பேச இருக்கிறீர்கள். அது எத்தகைய மகிழ்ச்சியை உங்களுக்குத் தருகிறது?

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பதில் – போகின்ற காரியம் நிச்சயமாக வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. முதலீட்டாளர்களை பொறுத்தவரை போட்டிப்போட்டுக் கொண்டு என்னைச் சந்திக்கவேண்டும், தமிழ்நாட்டிற்கு நாங்கள் இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யவேண்டும் என்று நேரம் கேட்டிருக்கிறார்கள். இப்போது நான் கொடுத்திருக்கின்ற நாட்களே போதாது என்று கருதுகிறேன். அந்த அளவுக்குப் போட்டிப்போட்டுக் கொண்டு ஆர்வத்துடன் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இன்றைக்கு தொழில் முதலீட்டில் முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் சொல்கிறார்களோ இல்லையோ, வெளிநாட்டில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். நிச்சயமாக நீங்கள் நினைப்பதுபோல நடக்கும்.

போகின்ற காரியம் நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  முதலீட்டை ஈர்ப்பதற்காக மகிழ்ச்சியோடு செல்கிறேன், உறுதியோடு செல்கிறேன்.

 கேள்வி – மத்திய அரசுடன் திடீர் என்று இணக்கமான  உறவை கடைப்பிடிப்பீர்களா? ஒன்றிய அமைச்சர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் நாணய வெளியீட்டு விழாவிற்கு வந்தது தொடர்பாக.

 மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பதில் – என்ன இணக்கமான நிலை. அது உங்களுடைய எண்ணம். நாணய வெளியிடுவது ஒன்றிய அரசின் பொறுப்பு. அவர்களின் அனுமதியோடுதான் வெளியிடப்படுகிறது. அதனால் அந்த மரியாதை அடிப்படையில், அந்த முறைப்படி அவர்களை அழைத்தோம். வந்தார்கள். நாணயத்தை வெளியிட்டுச் சென்றார்கள்.  

 கேள்வி – ஏற்கனவே மூன்று முறை வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு முதலீடுகள் ஈற்றது தொடர்பாக…

 மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பதில் –  என்னென்ன முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம் என்பதைச் சொல்லியிருக்கிறோம். எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப் போகிறோம் என்பதையும் சொல்லியிருக்கிறோம். அதேபோல என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறோம். என்னென்ன பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக உங்களிடம் சொல்லியிருக்கிறேன்.