தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(12.04.2022) தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் 66 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 274 காவலர் குடியிருப்புகள்,
11 காவல் நிலையங்கள், 3 காவல் துறை கட்டடங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 18 குடியிருப்புகள் மற்றும் ரு  சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை  கட்டடம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கான 58 குடியிருப்புகள் மற்றும் ஒரு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து,சமூகத்தில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டிடும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்கப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கடலூர் மாவட்டம் – சிதம்பரம், கோயம்புத்தூர் மாவட்டம் – கோவைபுதூர், திருப்பூர் மாவட்டம் – மங்களம், சென்னை மாவட்டம் – கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் 37 கோடியே 1 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 274 காவலர் குடியிருப்புகள்சேலம் மாவட்டம் – பனமரத்துப்பட்டி, சென்னை மாவட்டம் – பேசின் பிரிட்ஜ், அயனாவரம், பழந்தாங்கல்  மற்றும் அம்பத்தூர் (அனைத்து மகளிர் காவல் நிலையம்) திருவள்ளுர் மாவட்டம் – பள்ளிப்பட்டு, திருநெல்வேலி மாவட்டம் – மருத்துவக் கல்லூரி,காராஜா நகர் மற்றும் விக்கிரமசிங்கபுரம், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர், காஞ்சிபுரம் மாவட்டம் – சிவகாஞ்சி, கன்னியாகுமரி மாவட்டம் – கன்னியாகுமரி (போக்குவரத்து காவல் நிலையம்) ஆகிய இடங்களில் 12 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 காவல் நிலையக் கட்டடங்கள்சேலம் மாவட்டம் – சூரமங்கலத்தில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை காவல் நிலையம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள், என 2 கோடியே 49 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 காவல்துறை கட்டடங்கள்;

கோயம்புத்தூர் மாவட்டம் – காந்திபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் – வேடசந்தூர் ஆகிய இடங்களில் 3 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 18 குடியிருப்புகள்கோயம்புத்தூர் மாவட்டம் – கோயம்புத்தூர் மத்திய சிறை ளாகத்தில் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்;சேலம் மாவட்டம் – சங்ககிரி, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, சென்னை மாவட்டம் – சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் 9 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கான 58 குடியிருப்புகள்மயிலாடுதுறை மாவட்டம் – தரங்கம்பாடியில் 86 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம். என மொத்தம், 66 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது “காக்கும் பணி எங்கள் பணி” என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும்.  மக்கள் சேவையாற்றும் சில நிகழ்வுகளில் துறை பணியாளர்கள் தங்களது உயிரைத் துறக்க நேரிடுகிறது. 1967 ஆம் ஆண்டு முதல் இதுபோன்று நிகழ்வுகளில் இதுவரை 33 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியின் நிமித்தமாக வீரமரணமடைந்துள்ளனர். அவ்வாறு வீரமரணமடைந்தவர்களை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14ஆம் நாள் நீத்தார் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.  பணிநிமித்தம் வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக சென்னை, எழும்பூரில் உள்ள தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநரக வளாகத்தில் 25 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்களின் வீரவணக்க நினைவுச் சின்னத்தை மாண்புமிகு  முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ். இரகுபதி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.  சைலேந்திர பாபு, இ.கா.ப., சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் சுனில் குமார் சிங், இ.கா.ப., தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர்  பிராஜ் கிஷோர் ரவி, இ.கா.ப., தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்              முனைவர் அ.கா. விசுவநாதன், இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜூவால், இ.கா.ப., ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.