இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கி இருக்கும் “வாழை” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

நவ்வி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி ஹாட் ஸ்டார்  வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, புதுமுக குழந்தை நட்சத்திரங்களுடன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், கர்ணன் ஜானகி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, மனதை மயக்கும் ஒரு மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “வாழை”. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு,  இயக்குநர் மாரி செல்வராஜ் தனது நான்காவது படைப்பாக இப்படத்தினை இயக்கியுள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, கோலாகலமாக நடைபெற்றது. சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி, தயாரிப்பாளரும் நடிகருமான ஜே சதீஷ் குமார் மற்றும் கர்ணன் ஜானகி அம்மா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.**********

இந்நிகழ்வில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது… பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்ன்ன் படங்களுக்கு நீங்கள் தந்த ஆதரவு தான், இம்மாதிரியான படைப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்ல,  ஊக்கமாக இருந்தது, முதலில் உங்களுக்கு நன்றி.  இங்கு மேடையில் என்னுடன் பணியாற்றிய ரஞ்சித் சார்,  செண்பக மூர்த்தி சார், கலைப்புலி தாணு சார் என எல்லோரும் இருக்கிறார்கள். அவர்களிடம் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளேன். என் அரசியல் தெரிந்து கொண்டவர்கள் என் உடன் தொடர்ந்து பணியாற்றுவதில் என்னைப் புரிந்து கொண்டு ஆதரவு தருவது மிகப் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் ராம் சார் அவர் இருக்கும் தைரியம் தான் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. நான் இயக்குநராக ஆகிவிட்டாலும்,  நான் மேடைகளில் உணர்ச்சி வேகத்தில் பேசி விடுகிறேன் என்னை என் உணர்ச்சியைப் புரிந்து கொண்டவராக, ஒவ்வொரு முறையும் அழைத்து அறிவுரை சொல்வார். உன்னுடைய கதை உணர்ச்சிகள் கொண்டது அதை என்றும் விட்டு விடாதே என்று அறிவுரை சொல்வார். ஒவ்வொரு நடவடிக்கையிலும்  அவரின் பங்கு இருக்கிறது அவருக்கு என் நன்றிகள்.  உதயநிதி சார் மாமன்னன் ஷூட்டிங் சமயத்தில் வாழைப் படத்தைப் பார்த்து விட்டார். படத்தைப் பார்த்து விட்டு இந்த படத்தை நான் திரையரங்கில் வெளியிடுகிறேன் என்றார். சென்பகமூர்த்தி சார் எப்போதும் என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார், மாமன்னனில் நன்றாகப் பார்த்துக் கொண்டார்,  வாழை  படம் அவருக்குப் பிடிக்குமா ?  என்று சந்தேகத்திலிருந்தேன் அவர் படம் பார்த்துவிட்டு, இரண்டு மணி நேரம் பேசவில்லை, அதன் பிறகு இந்த படத்தில் நான் கண்டிப்பாக இருக்க வேண்டும் படத்தைத் திரையரங்குக்குக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி அவர் தான் இந்த படத்தைத் திரையரங்கிற்குக் கொண்டு வந்துள்ளார் அவருக்கு என் நன்றிகள்.  சந்தோஷ் நாராயணன் முதல் படத்திலிருந்து மிக நெருங்கிய நண்பர். எங்கள் கூட்டணியில் பாடல்கள் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் விதம்தான் அதற்குக் காரணம், இந்த படம் செய்யும்போது அவர் கல்கி படம் செய்து கொண்டிருந்தார், அவருக்கு எப்படி சிங்க் ஆகும் எனப் பயந்து கொண்டு இருந்தேன், ஆனால் இது அட்டகாசமாகப் பாடல்களைத் தந்துவிட்டார். நன்றி. கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் எல்லோருமே மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார்கள். இது என்னுடைய வாழ்க்கை கதை, நான் பட்ட கஷ்டத்தை அவர்கள் பட வேண்டும் என்று முதலிலேயே சொல்லிவிட்டேன். நான் வாழ்க்கையில் என்ன கஷ்டம் பட்டேனோ, அதை நீங்கள் இந்த படத்தில் பட்டால் தான், அந்த வலி தெரியும் என்று சொல்லித் தான் அவர்களை நடிக்க வைத்தேன். மிக அட்டகாசமாக நடித்துள்ளார்கள். எனக்கு முழு சுதந்திரம் தந்து, நான் அடுத்த படங்களில் பணியாற்றிக்  கொண்டிருந்தாலும், எந்த கேள்விகளும் கேட்காமல், இந்த படத்தைத் தயாரிப்பதில் முழுமையான சுதந்திரத்தைத் தந்த, ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு எனது நன்றிகள். என் மனைவி திவ்யா இந்த படம் மூலம் தயாரிப்பாளராக அவர் பெயரும் இந்த படைப்பில் இருப்பது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். ஏனென்றால் இது என்னுடைய வாழ்க்கை கதை, என்னுடைய வாழ்க்கைக் கதையில் திரைப்படமாக வரும் போது, அதில் அவர் பெயர் வருவது மிக முக்கியம் எனக்கருதுகிறேன். அவர் ஒரு சினிமா ரசிகையாக இருந்தார். அதுதான் அவரையும் என்னையும் இணைத்தது. தயாரிப்பாளராக அவர் பெயர் வருவது பெருமையாக உள்ளது.  என்னை என் அரசியலைப் புரிந்து கொள்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட திரைப்படம் வாழை, இந்த படத்தைப் பார்த்து முடிக்கும் போது, உங்களுக்கு என்னைப் பற்றி முழுதாக புரியும். இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.என்றார். 

தொழில் நுட்பகுழு விபரம்  எழுத்து இயக்கம் – மாரி செல்வராஜ் ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்  இசை – சந்தோஷ் நாராயணன் கலை இயக்கம் – குமார் கங்கப்பன் படத்தொகுப்பு  – சூரிய பிரதமான் சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்  நடனம் – சாண்டி  பாடல்கள் – யுகபாரதி, விவேக், மாரி செல்வராஜ்  உடை வடிவமைப்பு – ஶ்ரீ ஸ்வர்ணா  ஒலி வடிவமைப்பு – சுரேன் G ஸ்டில்ஸ் – ஜெய்குமார் வைரவன் உடைகள் – ரவி தேவராஜ்  மேக்கப் – R கணபதி விளம்பர வடிவமைப்பு – கபிலன் செல்லையா மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM) எக்ஸிக்யூட்டிவ் புரோடியூசர் – வெங்கட் ஆறுமுகம் தயாரிப்பாளர் – திவ்யா மாரிசெல்வராஜ், மாரி செல்வராஜ்.