நிதிக்குற்றத்தை சொல்லும் திரைப்படம் “ஜீப்ரா”

ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்  தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜீப்ரா”.  ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் 2024 அக்டோபர்  31 ஆம் தேதி வெளியீடாக,  தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகிறது.  தமிழில் முதல் ஓடிடி திரைப்படமான பெண்குயின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான திரில்லர் திரைப்படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். ஜீ தமிழ்  தொலைக்காட்சியில், வெற்றிபெற்ற “செம்பருத்தி” சீரியலின் தயாரிப்பாளர்கள், தங்களது முதல் திரைப்படமாக இப்படத்தினை தயாரித்துள்ளனர்.  பிரியா பவானி சங்கர், ஜெனிஃபர் பிசினாடோ, சுனில் வர்மா, சுரேஷ் மேனன் மற்றும் சத்யா அக்கலா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள்************

அரசின் அதிகாரமிக்க உலகில் நிகழும், நிதிக்குற்றங்களை ஆராயும் இப்படத்தின் கதைக்களம், ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். மூன்று வெவ்வேறு கதைகள் ஒன்றாக இணையும் இப்படத்தில், தென்னிந்தியத் திரைத்துறையின் மூன்று முக்கிய நட்சத்திரங்கள், ஒவ்வொரு கதையிலும் முதன்மைப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். தமிழிலிருந்து சத்யராஜ், தெலுங்கு சினிமாவில் இருந்து சத்யதேவ், கன்னடத்தைச் சேர்ந்த தனஞ்சயா என நட்சத்திர நடிகர்கள் இப்படத்திற்காகக் கைகோர்த்திருக்கின்றனர். சலார் மற்றும் கேஜிஎஃப் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது அதிரடியான பின்னணி இசை, இப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.  இப்படத்தை ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம் மற்றும் தினேஷ் சுந்தரம் இணைந்து, மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படைப்பாகத் தயாரித்துள்ளனர். நம்மைச் சுற்றி நிகழும் பெரும் நிதிக்குற்றத்தின் நாம் அறிந்திராத பக்கங்களைச் சொல்லும் ஒரு அதிரடி சஸ்பென்ஸ், திரில்லர் அனுபவத்திற்குத் தயாராகுங்கள். ஜீப்ரா தீபாவளி பண்டிகை தினமான அக்டோபர் 31, 2024 அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.