பசும்பொன்னில் தேசிய தலைவர் திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் மண்டபத்தில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் கட்டப்பட்டுவருவதை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில்  (10.10.2024) தேசிய தலைவர் தேவர் திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் மண்டபத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொதுமக்கள் காத்திருப்போர் கூடத்தை பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் முன்னிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில், தேவர் திருமகனார் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களில் மிக முக்கியமான ஒருவராக திகழ்ந்தவராவார். அதுமட்டுமின்றி இப்பகுதியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு பொதுமக்களின்; மனதில் தெய்வீக திருமகனாராக போற்றக்கூடியவராக இருந்துவரும் தலைவராக உள்ளார். அத்தகைய தேசிய தலைவருக்கு மாண்புமிகு கலைஞர் அவர்கள் 2007-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது தேவர் திருமகனார் நூற்றாண்டு விழா நடைபெற்றதையொட்டி அவருக்கு மணிமண்டபமும் மற்றும் அவர் வாழ்ந்த இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பித்து தந்தவர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் தான். அதுமட்டுமின்றி தேவர் திருமகனார் அவர்களின் பெயரில் கமுதி, திருநெல்வேலி, உசிலம்பட்டி போன்ற இடங்களில் கல்லூரிகள் கட்டப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் தென்னகத்தில் தேசிய தலைவர்களுக்கு சிலை வைக்கப்பட்டு வந்த நிலையில் முதன்முதலாக மதுரையில் மாபெரும் சிலை வைத்து இந்திய திருநாட்டின் தலைவரை வைத்து திறந்து வைத்ததும் மாண்புமிகு கலைஞர் அவர்கள் தான். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் தேவர் திருமகனாரின் பிறந்தநாள், நினைவு நாள் ஜெயந்தி விழாவையொட்டி ஆட்சியில் இருக்கும் போதும் சரி இதுக்கு முன்னரும் சரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பசும்பொன்னிற்கு வருகை தந்து, தேவர் திருமகனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி செல்வார்கள். அதேபோல் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் வருகை தந்து மரியாதை செலுத்தி செல்கிறார்கள். தற்பொழுது இப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க விழா காலத்தில் அதிகளவு பொதுமக்கள் வருகை தந்து வணங்கி செல்வதையொட்டி, தங்கி செல்வதற்கு ஏதுவாக ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழி ஆகியவை அமைத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு 10,000 சதுரடி பரப்பளவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் 30-ஆம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு தேவர் திருமகனார் ஜெயந்தி விழாவில் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட உள்ளன.

காத்திருப்போர் கூடத்தில் சுமார் 1000 பேர் தங்கி சென்றிடவும் மேலும் ஆண்கள் பகுதி, பெண்கள் பகுதி, மாற்றுத்திறனாளிகள் என தனித்தனியே பிரிக்கப்பட்டு பாதுகாப்பாக சென்றிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விழாக்காலங்கள் போக மற்ற காலங்களில் பொதுமக்கள் பல்வேறு வகையில் பயன்படுத்திட ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்பகுதியில் தேவையான திட்டங்கள் மற்றும் வசதிகள் விரிவுபடுத்தி தரப்படும் என மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தெரிவித்தார். பின்னர் தேவர் திருமகனார் நினைவிடத்திற்கு மாண்புமிகு பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும்  பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் சென்று  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.