தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்த தெருக்கூத்து நிகழ்ச்சி

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ஒருங்கிணைப்பில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. உலக அளவில் அதிக கலைஞர்களைக் கொண்டு நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சி என்ற கின்னஸ் சாதனையையும் படைத்தது. இந்த சாதனைக்கு பின்னரான சவால்கள் குறித்து விவரிப்பதற்காக கலைஞர்களுக்கு தெருக்கூத்து பயிற்சியளித்த திரைப்பட இயக்குநரும், தெருக்கூத்து கலைஞருமான சங்ககிரி ராஜ்குமார், இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தமிழ்நாடு அறக்கட்டளையின் தேசிய தலைவர் சிவா, தமிழ்நாடு அறக்கட்டளையின் தமிழக ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் ஐஏஎஸ் (ஓய்வு) மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவித்தார்கள்*********

இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநரும், தெருக்கூத்து கலைஞருமான சங்ககிரி ராஜ்குமார் பேசுகையில், ”என்னுடைய இயக்கத்தில் வெளியான ‘வெங்காயம்’ எனும் திரைப்படத்தில் தெருக்கூத்து கலையைப் பற்றியும், கலைஞர்களைப் பற்றியும் அழுத்தமாக விவரித்திருந்தேன். இதனை அனைத்து ஊடகங்களும் குறிப்பிட்டு எழுதி என்னுடைய முயற்சியை பாராட்டி இருந்தன. நான் திரைத்துறைக்கு வருகை தந்த பிறகு தான் தெருக்கூத்து கலையின் அசலான மதிப்பினை உணர்ந்தேன். சினிமாவில் ஒவ்வொரு பிரிவிற்கும் பத்து உதவியாளர்களை வைத்து பணியாற்றுவோம். ஒப்பனை, சிகை அலங்காரம், ஆடை வடிவமைப்பு ,சண்டை பயிற்சி, இயக்கம் என ஒவ்வொன்றுக்கும் தேவையான உதவியாளர்களை வைத்து தான் பணியாற்றுவோம். ஆனால் நம்முடைய தாத்தாக்களும் தந்தைமார்களும் கிராமப்புறத்தில் தெருக்கூத்து கலையை நிகழ்த்தும்போது, அவர்களே ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, சிகை அலங்காரம் செய்து கொண்டு மேடை ஏறிய பிறகு நடிப்பு மட்டுமல்லாமல் பாடவும் செய்வார்கள். அதிலும் கடை கோடியில் உட்காந்து ரசிக்கும் ரசிகர்களுக்கும் கேட்கும் வகையில் மிகவும் உரக்கப் பாடுவார்கள். நிகழ்ச்சி முடியும் வரை ஆற்றல் குறையாமல் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் தெருக்கூத்து கலையை நிகழ்த்துவார்கள். அவர்களின் கலை ஈடுபாடு இந்த தருணத்தில் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.

இது அழிந்து வரும் கலை… நலிவடைந்து வரும் கலை… என சொல்வதை விட இதற்கு ஆக்கப்பூர்வமாக நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். களத்தில் இறங்கி எதையெல்லாம் செய்தால் இதனை மீட்டெடுக்க இயலும் என யோசிக்க தொடங்கினேன். முதலில் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் மற்றும் கோவில் திருவிழாக்களில் மட்டுமே இது நடைபெற வேண்டுமா..! இது அரசு நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள், பள்ளி ஆண்டு விழாக்கள், அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகள் என பல இடங்களிலும் இந்த தெருக்கூத்து கலையை நிகழ்த்தும் அளவுக்கு மாற்றி அமைக்க வேண்டும் என திட்டமிட்டேன். இதற்கான முன்னெடுப்பை ஆறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினேன். இதன் பிறகு முதன்முதலாக கம்போடியா நாட்டிலுள்ள அங்கோர்வாட் எனுமிடத்தில் உள்ள ஆலய வளாகத்தில் அரங்கேற்றம் செய்தோம். அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அங்குள்ள தமிழர்கள், தமிழர் அல்லாதவர்கள் என பலரும் இந்த தெருக்கூத்து கலையை கொண்டாடிய விதம் என்னுள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்தத் தருணத்தில் இந்த தெருக்கூத்து கலை மிகப்பெரிய அளவிலான கலை வடிவம் என்பதை உணர்ந்தேன். அதன் பிறகு இன்றைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அதாவது அவர்களும் ரசிக்கத்தக்க வகையில் இந்த கலையில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து சிந்திக்கத் தொடங்கினேன். ஏனெனில் தெருக்கூத்து என்றால் இரவு முழுவதும் நடனமாடுவார்கள். புரிந்து கொள்ள இயலாத கடும் தமிழில் உரையாடல்களும் வசனங்களும் இடம் பெற்றிருக்கும். சில இடங்களில் ஆபாச தொனியில் வசனங்கள் இடம் பெறும்.. இத்தகைய விஷயங்களையெல்லாம் மாற்றி அமைக்கலாம் என திட்டமிட்டேன்.

இந்தியாவில் உள்ள மாணவர்களை விட வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் தமிழில் பேசுவதே கடினமானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். இந்தக் கலைக்கான தமிழ் மொழி வடிவத்தை அவர்களுக்கு கற்பித்து மேடை ஏற்றுவது என்பது கடும் சவால் நிறைந்ததாக இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக அவர்களுக்கு இத்தகைய கலைகளின் மூலமாக மொழியை கற்பிப்பது எளிதாக இருந்தது. இளம் கலைஞர்கள் இந்த கலைக்கான தமிழ் மொழி வடிவத்தை எளிதாக உட்கிரகித்துக் கொண்டு பேசி நடித்தார்கள். அதன் பிறகு அவர்களுக்கு பிடிக்கும் வகையில் இந்த தெருக்கூத்து கலையின் நீளத்தை குறைத்து செழுமைப்படுத்தினேன். பின்னர் தெருக்கூத்து கலையில் ராமாயணம், மகாபாரதம் போன்ற வட இந்திய நாயகர்களை போற்றும் கதைகள் தான் அதிகம். ஏன் தமிழில் நாயகர்கள் இல்லையா..? தமிழில் கதைகள் இல்லையா..?  என தேடத் தொடங்கினேன். அதன் பிறகு சங்கத்தமிழ், சிலப்பதிகாரம், புறநானூறு போன்றவற்றை வாசித்த போது ஏராளமான கதைகள் கிடைத்தன.  அந்தத் தருணத்தில் வள்ளல்கள் என்ற கருத்துருவில் கதைகளை தேடத் தொடங்கிய போது.. பத்துக்கும் மேற்பட்ட கதைகள் கிடைத்தன. அதியமான், குமணன், பாரிவள்ளல் என ஏராளமான வள்ளல்களின் கதைகளும், அவர்களின் அசலான வாழ்வியல் சம்பவங்களும் கிடைத்தன. அதனை தெருக்கூத்தாக உருமாற்றினோம்.

இது ஏன் எனில் தெருக்கூத்து கலைஞர்களாக வேடமிடுபவர்கள் தமிழர்கள். பார்வையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். அதனால் தமிழ் கதாநாயகர்களை பற்றிய தெருக்கூத்து கதையை உருவாக்கினோம். இதனை மேடையேற்றும் போது மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தத் தருணத்தில் இது போன்ற கலையை உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும் என எண்ணிய போது எங்களுக்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான தமிழ்நாடு அறக்கட்டளையின் தொடர்பு கிடைத்தது.

அமெரிக்காவில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த தமிழ்நாடு அறக்கட்டளையின் தொடர்பு கிடைத்தவுடன்.. அவர்களின் பொன்விழா ஆண்டு நிகழ்வில் தெருக்கூத்து கலையினை மேடையில் நிகழ்த்த விரும்பினோம். இதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டனர். அத்துடன் உலக மக்கள் அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் மிகப்பிரம்மாண்டமாக இந்த தெருக்கூத்தினை நடத்திட வேண்டும் என்றனர். இந்த எண்ணத்தை தமிழ்நாடு அறக்கட்டளை நிர்வாகிகள் முன்வைக்க நானும் இந்த ஒரு தருணத்திற்காக தான் காத்திருக்கிறேன் என்று கூறி அந்த வாய்ப்பினை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டேன். இங்கிருந்து அமெரிக்காவிற்கு சென்று அங்குள்ள 300 கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இரண்டு மாதம் பயிற்சி அளித்து, சிகாகோ நகரில் 5000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் முன்னிலையில் தெருக்கூத்து கலையினை அரங்கேற்றினோம். அங்கு கின்னஸ் சாதனையாளர்களுக்கான ஆய்வுக் குழுவினர் வருகை தந்தனர். நிகழ்ச்சியை முழுவதுமாக உன்னிப்பாக கண்காணித்து, வெளிநாடுகளில் ஒரே தருணத்தில் அதிகமான கலைஞர்கள் கலந்து கொண்டு மேடையில் நிகழ்த்திய தெருக்கூத்து கலை மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி இதுதான் என கின்னஸ் சாதனைக்கான சான்றிதழையும் அங்கீகாரத்தையும் அளித்தனர். இந்த அங்கீகாரம் கிடைத்த போது இதற்காக நாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறைந்து மகிழ்ச்சியில் திளைத்தோம்.