தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2024 ஜனவரி முதல் 2024 மே மாதம் வரை 5 மாதங்களில் மொத்தம் 23,15,101 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சி.சமயமூர்த்தி.இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (13.6.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது,

            தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை அளித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971 ஆம் ஆண்டில் உருவாக்கினார்கள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், சுற்றுலா பயணத்திட்டங்கள், சுற்றுலா பேருந்து சேவைகள், படகு சேவைகள், தொலைநோக்கி இல்லங்கள் என குறைந்த செலவில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சுற்றுலா சேவைகளை வழங்கி வருகின்றது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே சுற்றுலா பயணிகளின் விருப்பமான முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். ஓட்டல் தமிழ்நாடு உணவகங்களை பொதுமக்கள் எளிதில் அடையாளம் கண்டறியும் வகையில் அமுதகம் என்று பெயர் சூட்டியுள்ளார். சுற்றுலா கொள்கை 2023- ஐ வெளியிட்டு, சுற்றுலாத்துறையில் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகை மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளார்கள்.

        தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும் வகையில், சாகச படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டுகளுடன் கூடிய படகு குழாம்களை முட்டுக்காடு, முதலியார் குப்பம், உதகமண்டலம், பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், குற்றாலம் மற்றும் வாலாங்குளம் ஏரி உள்ளிட்ட 9 இடங்களில் இயக்கி வருகிறது. வாட்டர் ஸ்கூட்டர்கள், மோட்டர் படகுகள், விரைவு படகுகள், மிதிப்படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள், குழந்தைகளுக்கான மிதிப்படகுகள் என மொத்தம் 590 படகுகள் சுற்றுலா பயணிகளுக்கு நீங்காத அனுபவங்களை அளித்து வருகின்றன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி புதிய படகு குழாம்கள் சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

2024 ஜனவரி மாதம் 3,92,142, பிப்ரவரி மாதம் 2,74,078, மார்ச்மாதம் 4,79,078, ஏப்ரல் மாதம் 5,36,513, மே மாதம் 6,33,290 என2024 ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 5 மாதங்களில் மொத்தம் 23,15,101 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அலுவலர்களும், பணியாளர்களும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்களுக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கி அவர்களுடைய முதலாவது விருப்பமான தேர்வாக ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள் மற்றும் அமுதகம் உணவகங்களை உருவாக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும்.  

            தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள் தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நகரின் மையப்பகுதிகளில் குறிப்பாக பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் உள்ளன. ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளில் தொடர்ந்து வெவ்வேறு ஊர்களில் 3 நாட்கள் தங்குபவர்கள், ஒரே விடுதியில் 3 நாட்களுக்கு தங்குபவர்கள், மொத்தமாக 5 அறைகள், 10 அறைகள், 20 அறைகள் என முன்பதிவு செய்பவர்கள் ஆகிய நபர்களுக்கு தள்ளுபடி சலுகைகள் வெவ்வேறு சதவீதத்தில் வழங்கப்படுகின்றன.

           தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்கள் மற்றும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதி அறைகளை முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com என்ற இணைதள பக்கத்தில் தங்களது செல்போன் அல்லது கணினி மூலமாக முன்பதிவு செய்தோ, அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திற்கு நேரில் வருகை தந்தோ முன்பதிவு செய்யலாம்.

          மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண் 180042531111  மற்றும் 044-25333333, 044-25333444  ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம் என்று மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுமேலாளர் திருமதி.ச.கவிதா உள்பட சுற்றுலாத்துறை அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர்கள், மேலாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.