கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘தி வெர்டிக்ட்’. இப்படம் திரையரங்குகளில் வெளியிடத் தயாராக உள்ளது . இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ‘தி வெர்டிக்ட்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் கிருஷ்ணா சங்கர். அக்னி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். அவர் படம் பற்றிக் கூறும்போது, ” மர்மங்களும் எதிர்பாராத முடிச்சுகளும் யூகிக்க முடியாத திருப்பங்களும் நிறைந்த திரில்லர் படமாக இந்த ‘தி வெர்டிக்ட்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது.இது நிச்சயமாக சிலிர்க்கும் உணர்வோடு பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் “என்கிறார். இந்தக் கதை முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடக்கிறது. முழுப் படப்பிடிப்பும் அமெரிக்காவிலேயே நடத்தப்பட்டுள்ளது*******
படத்தை எழுதி இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் கிருஷ்ணா சங்கர் படத்தைப் பற்றி பேசும்போது, “ஒரு பணக்கார அமெரிக்க பெண் கொலை ஆகிறாள். அவளுடன் நட்பு பாராட்டி வந்த இன்னொரு பெண் அந்தக் கொலை வழக்கில் சிக்கிக் கொள்கிறாள்.அவளது கணவர் சிக்கலில் மாட்டியுள்ள தன் மனைவியை மீட்கப் போராடுகிறார்.ஒரு பாவமும் அறியாத தன் மனைவி ஒரு நிரபராதி, என்று நம்பிக்கையுடன் காப்பாற்ற போராடும் கணவன். இது ஒரு பக்கம் என்றால், குற்ற செயல் நடந்த கதை வெவ்வேறு திருப்பங்களுடன் பயணிக்கிறது.அது ஒரு மர்மமான மர்டர் மிஸ்டரி த்ரில்லர் அனுபவமாக இருக்கும் “என்கிறார். தொழில்நுட்ப ரீதியாகப் படம் ஒரு அற்புதமான குழுவைக் கொண்டிருக்கிறது. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும் ,சதீஷ் சூர்யா எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர். ஐஃபா (IIFA) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய அமெரிக்கப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆதித்யா ராவ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இவர் ஆர். மாதவனின் இயக்கத்தில் வெளியான ‘ராக்கெட்ரி :தி நம்பி எஃபெக்ட் ‘படத்தின் முன்னணிப் பாடகராகவும் குரல் வடிமைப்பாளராகவும் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர். இவர் தனது தனித்துவமான இசைத் திறமையை இந்தப் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். விரைவில் படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளன.. ஏதோ வெறும் பின்புலத்திற்காக அமெரிக்க நாட்டைக் காட்டாமல் அங்குள்ள வாழ்க்கை முறை, காவல்துறை, புலனாய்வு நடவடிக்கைகள், நீதிமன்றம் போன்ற அனைத்தும் நம்பகத்தன்மையுடன் படத்தில் காட்டப்பட்டுள்ளன.அந்த பரபரப்பான உலகம் பார்வையாளர்களை வசீகரித்துப் புதிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்படியாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்