’வெப்பன்’ திரைப்படத்தின் காணொளிக் காட்சி வெள்ளோட்ட விழா

குகன் சென்னியப்பன் இயக்கத்தில்  சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஞ்ஞான திகிலூட்டும்  படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் சில பகுதியின் காணொளிக்காட்சி வெள்ளோட்டம் நடந்தது. இந்நிகழ்வில் நடிகர் வசந்த் ரவி, பேசியபோது, “தமிழில் சூப்பர் ஹூ்யூமன் கதைகளை எடுத்து செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதை இயக்குநர் குகன் விரும்பி செய்திருக்கிறார். சின்ன வயதில் இருந்தே நிறைய காமிக்ஸ் கதைகளை அவர் படித்து வளர்ந்ததால் சினிமாவில் அதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முதல்படியாக ‘வெப்பன்’ படத்தை எடுத்திருக்கிறார்.*******

இந்த மாதிரியான படங்களுக்கு பெரிய பட்ஜெட் தேவைப்படும். அதை செய்து கொடுத்த மில்லியன் ஸ்டுடியோவுக்கு நன்றி. படத்தின் டிரெய்லரை நெல்சன் சாரிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டினேன். ‘டிரெய்லர் ரொம்ப நல்லாருக்கு. இதுபோன்ற ஃபேண்டஸி ஆக்‌ஷன் படம் வந்து ரொம்ப நாள் ஆச்சு என்றார். ’ராக்கி’ படத்தில் பாரதிராஜா சாருடன் நடித்தேன். பின்பு, ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி சாருடன். அவர்களிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேனோ அதேபோலதான், சத்யராஜ் சாரிடமும் நிறையக் கற்றுக் கொண்டேன். மனதில் இருக்கும் எதையும் வெளிப்படையாக சொல்லி விடுவார். அவர் எவ்வளவோ படங்கள் நடித்தி்ருந்தாலும் இந்த படம் அவரது கரியரில் மறக்க முடியாததாக இருக்கும். அவருடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. தான்யா இதுவரை நடித்த படங்களிலேயே தனக்குப் பிடித்த படமாக ‘வெப்பன்’தான் சொன்னார். நான் எவ்வளவோ ஜானர்களில் படங்கள் செய்து இருந்தாலும் சூப்பர் ஹூயூமன் என்பது புது ஜானர். ஹாலிவுட் படங்களைப் போல இந்தப் படத்தைப் பாருங்கள். இது ப்ரீகுவல்தான். குகன் இந்த கதைக்கு ஒரு யுனிவர்ஸே வைத்துள்ளார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகர் சத்யராஜ், “திரையில காட்டுவதை விட, தரையில வீரத்தைக் காட்டுவதுதான் சூப்பர் ஹீரோ. இந்த மாதிரி படத்திற்கு அதிக பட்ஜெட் தேவைப்படும். படத்தின் கதையை நம்பி மட்டுமே இவ்வளவு பட்ஜெட் தயாரிப்பாளர் மன்சூர் செய்துள்ளார். என் நண்பர் விஜயகாந்த்திற்கு ‘வானத்தைப் போல…’ என்ற அற்புதமான பாட்டைக் கொடுத்தவர் ஆர்.வி. உதயகுமார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தின் இரண்டு ஹீரோக்களாக நான் நினைப்பது தயாரிப்பாளர் மன்சூரையும் இயக்குநர் குகனும்தான். தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் ரொம்ப ஸ்டிராங்க். கட்டப்பா போல இந்தப் படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் காலத்தால் அழியாத ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். படம் வெற்றிப் பெற வாழ்த்துகள்!”.