கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க முயற்சி : ஒன்றிய அரசின் நாசக்காரத் திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – வேல்முருகன்

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால்,  புயல், வெள்ளம், வறட்சி, பெருமழை, காட்டுத்தீ உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகளிலிருந்து உயிர்களையும், உடைமைகளையும், வாழிடங்களையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க, உலக நாடுகள் என்ன செய்வதறியாமல் திணறி வருகின்றன.
காட்டுத் தீ, பெரும் புயல்கள், அதிதீவிர மழை, அதீத வெப்பம், பனிப்பாறை உருகுவது, கடல் மட்டம் உயர்வது, கொள்ளை நோய்கள் என மனித சமூகம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு இயற்கை சீற்றத்திற்கும் மனித செயல்பாடுகளே அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது என்பது வரலாறு.
இம்மண்ணின் மீது மனித சமூகம் நிகழ்த்திய வன்முறைக்கான எதிர்வினையே, கேரளா வயநாடு பேரிடர் நிகழ்வு. இந்த பேரிடர் நிகழ்வில் இருந்து, குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என 100க்கும் மேற்பட்ட உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். இந்த துயர நிகழ்வில் இருந்து படிப்பினையை கற்றுக் கொள்ளாத மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில், அணுக்கனிம சுரங்களை அமைப்பதற்கான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் நாசக்காரத் திட்டத்தால், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாதிப்புக்க்குள்ளாகும் என்ற பேராபத்தை புரிந்துகொள்ளாமல், அதற்கான கருத்து கேட்புக் கூட்டத்திற்கான தினத்தையும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. அதாவது, இந்திய அணு சக்தித்துறை கன்னியாகுமரி மாவட்டத்தில் மோனசைட் கனிமம் மிகுந்த 1144.0618 எக்டர் பரப்பிலான பகுதிகளில் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசின் இசைவையும், ஒன்றிய சுரங்க அமைச்சக அனுமதியினையும் பெற்றுள்ளது. இதன் மூலம், கிள்ளியூர் தாலுகாவில்  உள்ள கீழ்மிடலாம், மிடாலம், இனயம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லன்கோடு ஆகிய பகுதிகளில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் அமைய இருக்கும் மொத்தப் பரப்பளவான 1144.0618 எக்டேரில் 353.4876 எக்டேர் பாதுகாக்கப்பட்ட கடலோர மண்டலத்தின் கீழ் வருகிறது. சுமார் 59.88 மில்லியன் டன் அளவிலான அணுக் கனிமங்கள் வெட்டியெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. அகழ்விக்கக்கூடிய கனிம படிமத்தில், அணுக் கனிமங்களின் அளவு 10 முதல் 22 விழுக்காடு வரை உள்ளது. இதனடிப்படையில், புதிய சுரங்க குத்தகை மூலம் ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன்கள் என்ற விதத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மணவாளக்குறிச்சி ஆலைக்குத் தேவையான மூலப்பொருள்கள் அகழ்ந்தெடுக்கப்படும் என ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் அமையவிருக்கும் இடம் இயற்கையாகவே அதிக கதிரியக்கதன்மையுடைய பகுதிகளாகும். இந்த நிலையில் அணுக் கனிமங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டால், அணுக்கதிரியிக்க பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும். ஏற்கனவே, கன்னியாகுமரி, திருநெல்வேலி,ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற தாதுமணல் கொள்ளையால் மீனவ கிராமங்களில் வசிக்கும் பலருக்கும் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தைராய்டு, மலட்டுத் தன்மை, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கூத்தன்குழி, மனவாளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் அதிகம்பேர் இருப்பதாக கூறப்படுகிறது. கடலோரங்களில் இருந்த மணற்குன்றுகள் அழிக்கப்பட்டுவிட்டன. கடற்கரையின் வளம் அழிக்கப்பட்டால் அது ஆழமற்ற கடல்பகுதியின் வளத்தையும் அழித்துவிடும். இந்த நிலையில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால் பாதிப்புகள் இன்னும் பன்மடங்கு உயர கூடும். இதனைக் கவனத்தில் கொள்ளாமல், தற்போது அணுக் கனிம தாதுக்களை அகழ்ந்தெடுக்க சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. எனவே, தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் தாது மணல் உள்ளிட்ட அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்கள் முற்றிலுமாகக் கைவிடப்பட வேண்டும். அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும்போது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக, ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
தமிழ்நாட்டின் மக்களின் எதிர்ப்பை மீறி, அணுக் கனிம சுரங்கங்களை திறக்க முற்பட்டதால், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகளையும் ஒன்றிணைத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் மாபெரும் போராட்டத்தை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.